2 சட்டைகள்
2 காற்சட்டைகள்
2 உள்ளாடைகள்
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மார்ச் மாதத்தில் மலேசியா தனது எல்லைகளை மூடியபோது சிங்கப்பூருக்கு வந்த 32 வயதான மலேசியர் முகமது இஸ்வான் சரிப் கொண்டு வந்த பொருட்கள் இவை.
ரெட்மார்ட் இணையப் பேரங்காடியில் சேமிப்புக் கிடங்கு உதவியாளரான அவர், சில வாரங்களில் நிலைமை சீராகிவிடும் என்று நம்பினார்.
கடந்த மாத வாக்கிலேயே வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் மனச்சோர்வும் அவரை மிகவும் ஆட்கொண்டன.
“எனது குடும்பம்தான் எனக்கு எல்லாம். என்னுடைய நான்கு வயது மகளுக்கும் எனக்கும் இடையே மிகுந்த நெருக்கம் உண்டு. தற்போது 18 மாதங்களாகியிருக்கும் இரண்டாவது குழந்தை, நான் வீட்டிலிருந்து கிளம்பியபோது, தவழத் தொடங்கியிருந்தது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
இஸ்வானின் மனநிலையை மாற்ற, அவரது உறவினர் முகமது ஃபயிஸ் ரோஸ்மானுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. சிங்கப்பூர் ஆட்டோமொபைல் சங்கத்தில் பணிபுரிகிறார் ரோஸ்மான்.
தன் மனைவியையும் திரு இஸ்வானின் மனைவியையும் உட்லண்ட்சை நோக்கியிருக்கும் ஜோகூர் எல்லைப் பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 5) வரச் சொன்னார் திரு ரோஸ்மான். இஸ்வானையும் அழைத்துக்கொண்டு உட்லண்ட்ஸ் வாட்டர்ஃபிரன்ட் பூங்காவுக்குச் சென்று ஜோகூர் நீரிணையை நோக்கியிருக்கும் பகுதிக்குச் சென்றார்.
நீரிணைக்கு அந்தப் பக்கம் இருந்த மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்த்து, இந்தப் பக்கம் இருந்து கையசைத்த திரு இஸ்வனின் மகிழ்ச்சியை திரு ரோஸ்மான் காணொளியில் பதிவு செய்தார்.
“வெகு தொலைவில் இருந்தாலும் கைபேசித் திரையில் இன்றி, நேரடியாகப் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது,” என்றார் திரு இஸ்வான்.
தந்தையை தொலைநோக்கிகள் மூலம் பார்த்த மகள்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக, திரு இஸ்வானின் மனைவி லியானா இட்ரிஸ், 33, தெரிவித்தார்.
“அப்பா, அப்பா என்று கத்தியவாறு பிள்ளைகள் துள்ளிக் குதித்தனர்,” என்றார் லியானா.
இந்தக் காட்சியைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவியது.
“இந்தக் காணொளியைப் பார்த்த என் மூத்த மகள் அழத் தொடங்கிவிட்டர். அவர்களை மறுபடியும் எப்போது பார்ப்பேன் என்று தெரியவில்லை; ஆனால், அவர்களைப் பார்க்க வேண்டுமென தினமும் பிரார்த்தனை செய்கிறேன்,” என்றார்.
தற்போதைக்கு நீரிணையின் இரு கரைகளிலுமிருந்தே கையசைக்கக்கூடிய சூழலில் இவ்விருவரும் இருந்தாலும், “எங்களுக்காக தொலைநோக்கி ஒன்றை வாங்கி இருக்கிறேன்,” என்றார் திரு ரோஸ்மான்.