பலவிதமான முதலீட்டு மோசடிகளில் $1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை பலரிடம் மோசடி செய்த 35 வயது ஆடவர், தம் தந்தையின் காசோலைகளைத் திருடி, மோசடி செய்த பணத்தைப் பட்டுவாடா செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
தமது தந்தையிடமிருந்து தலா $150,000 மதிப்பிலான 4 காசோலையைத் திருடி, அவற்றை தம்மால் மோசடி செய்யப்பட்டவர்களுக்கு வழங்க முயற்சி செய்தார் 35 வயதான சதீஷ் நாயர் தனபாலன்.
தம் மீதான 20 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். எழுவரை ஏமாற்றிய 8 குற்றச்சாட்டுகள், 11 குற்றச்சாட்டுகள் போலி ஆவணம் தொடர்பானவை. எஞ்சிய ஒரு குற்றச்சாட்டு தந்தையின் காசோலைகளைத் திருடியது.
அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும்போது ஏமாற்றியதாக 14, போலி ஆவணங்கள் தொடர்பாக 27 கூடுதல் குற்றச்சாட்டுகளையும் நீதிபதி கணக்கில் கொள்வார்.
அதிக வழங்கீடுகளைக் கொடுக்கும் என்று போலியான முதலீட்டுத் திட்டங்களை சதீஷ் அறிமுகப்படுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
திரு இளங்கோவன் பிள்ளை முனிசாமி என்பவர் 2014 முதல் 2016க்கு இடைப்பட்ட காலத்தில் $207,100 தொகையை சதீஷிடம் வழங்கினார்.
தெமாசெக் ஹோல்டிங்சில் அந்தப் பணத்தை முதலீடு செய்வதாக அண்டைவீட்டாரான இளங்கோவனிடம் சதீஷ் தெரிவித்தார்.
“ஹோ சிங்” என தம்மைக் கூறிக்கொண்ட ஒருவரிடமிருந்து குறுஞ்செய்திகள், அழைப்புகளைப் பெற்றதாக இளங்கோவன் தெரிவித்தார்.
திருவாட்டி ஃபாதில்லா இப்ராகிம், அவரது கணவர் அனிஸ் சிராஜுதின் ஷேக் அப்துல்லா, அனிசின் அம்மா திருவாட்டி பரக்கதுனிசா இ. ஏ. ஹலியுல் ரஹிமான் ஆகியோரிடமிருந்து $415,000 மோசடி செய்தார் சதீஷ்.
முதலீடு செய்திருப்பதாக திரு அனிசுக்கு அவ்வப்போது போலி கடிதங்களை அனுப்பி வந்தார் சதீஷ்.
2017ஆம் ஆண்டில் வழங்குதொகை பெறுவது நின்ற பிறகு, தாம் முதலீடு செய்த பணத்தைத் திருப்பித் தருமாறு கோரினார் அனிஸ்.
ஆகஸ்ட் 2017ல் தம் தந்தையிடமிருந்து காசோலைகளைத் திருடியதுடன் தந்தையின் கையொப்பத்திலும் மோசடி செய்தார்.
வங்கியில் போதிய நிதி இல்லாததால் அந்தக் காசோலைகளைப் பணமாக்க முடியவில்லை.
ஏமாற்றியதில் ஒரு பகுதியை திருப்பிக் கொடுத்துள்ளதாகவும் எஞ்சிய தொகையையும் திருப்பித் தர சதீஷும் அவரது குடும்பத்தாரும் எண்ணம் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர் சுஜேஷ் ஆனந்தன் தெரிவித்தார்.
ஏமாற்று குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம். போலி ஆவண குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் நான்காண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.