படகிலிருந்து கடலில் குதித்து, சிங்கப்பூரை நோக்கி நீந்திய நான்கு இந்தோனீசியர்கள், சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டதாக இன்று (அக்டோபர் 13) போலிசார் தெரிவித்தனர்.
எண் எதுவும் குறிப்பிடப்படாத படகிலிருந்து19 முதல் 38 வயதுக்குட்பட்ட அந்த நால்வரும் துவாஸ் மீட்கப்பட்ட நிலப் பகுதிக்கு முன்னதாக கடலில் குதித்து கடற்கரையை நோக்கி நீந்தி வந்ததாகக் கூறப்பட்டது.
துவாஸ் மீட்கப்பட்ட நிலப் பகுதியில் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) இரவு 8.30 மணியளவில் காணப்பட்டதாக போலிஸ் கடலோரக் காவல் படையினரின் (PCG’s) கண்காணிப்பு அமைப்புகள் காட்டின.
அவர்களைக் கண்டுபிடித்த பிறகு, போலிஸ் கடலோர காவல் படை, ஜூரோங் போலிஸ் பிரிவு, கூர்க்கா காண்டிஜென்ட், ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் கமாண்டோ, உள்துறைக் குழுவின் ஆளில்லா விமானப் பிரிவு ஆகியவை அந்த நால்வரைக் கைது செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஐந்து மணி நேரத்துக்குள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்ததாக அவர்கள் நால்வர் மீதும் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 6 மாதம் வரைசிறைத் தண்டனை, மூன்று பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
அவர்கள் நால்வரும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்திடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.