தமது தந்தை, வளர்ப்புத் தாயார் மற்றும் வளர்ப்புத் தாயின் பிள்ளைகள் ஆகியோரை ஏமாற்றி முஸ்தஃபா செண்டர் உரிமையாளர் முஸ்தாக் அகமது தமது மனைவி, பிள்ளைகளோடு செல்வசெழிப்புடன் இருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
34 நாட்களுக்கு நீடிக்கவுள்ள இவ்வழக்கு விசாரணை, நேற்று தொடங்கியபோது திரு முஸ்தாக் மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் இக்குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
அவர்கள் மீது வழக்கு தொடுத்தவர்கள் திரு முஸ்தாக்கின் வளர்ப்புத் தாயார் மற்றும் அவரின் ஐந்து பிள்ளைகள்.
பிரபல முஸ்தஃபா செண்டருக்குப் பின்னணியில் இயங்கும் ‘முகம்மது முஸ்தஃபா அண்ட் சம்சுதின் கம்பெனி’யைக் கலைத்துவிடுமாறு ஆணையிட உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோரின் சார்பில் திரு அயாஸ் அகமது என்பவர் கோரியுள்ளார்.
திரு முஸ்தாக்கின் தவறுகளால் பங்குதாரர்களின் உறவில் ‘மீளமுடியாத முறிவு’ ஏற்பட்டுள்ளதே வழக்கு தொடுத்த தரப்பின் வாதமாகும்.
இவ்வாறு வழக்கு தொடுத்தோரைப் பிரதிநிதிக்கும் மூத்த வழக்கறிஞர் தவீந்தர் சிங், திரு முஸ்தாக்கின் செயல்கள் குறித்து, “நிறுவனத்தைத் தமக்கு சொந்தமாக கருதி, மற்ற பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்களின் உதவியுடன் தமது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, அவருக்குச் சொந்தமில்லாத பங்குகளையும் பணத்தையும் பயன்படுத்திக்கொண்டார்,” என்று கூறினார்.
தமது தந்தையான திரு முகம்மது முஸ்தஃபா, 1995ஆம் ஆண்டில் நிறுவனத்தில் கொண்டிருந்த பங்குகளை திரு முஸ்தாக் ‘ரகசியமாக’ பலங்குறைய வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். 2001ஆம் ஆண்டில் திரு முகம்மது முஸ்தஃபா இறந்ததை அடுத்து, அவரது பங்குகளின் பலத்தை திரு முஸ்தாக் இன்னும் குறைத்து 14.89% ஆக்கியதாகவும் தமது சொந்த குடும்பத்தின் பங்குகளின் பலத்தை 69.99% ஆக உயர்த்தியதாகவும் திரு சிங் தெரிவித்தார்.
மேலும் 2000க்கும் 2013க்கும் இடைப்பட்ட காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு தலா $9.6 மில்லியன் லாபம் வந்தபோதும் ஈவுத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் திரு முஸ்தாக் ஆண்டுக்குத் தலா $3 மில்லியன் முதல் $5 மில்லியன் வரையிலான இயக்குநர்க் கட்டணத்தை ஓர் ஆண்டில் பெற்றதுடன், இல்லத்தரசியான அவரின் மனைவி இஷ்ரத்துக்கு ஆண்டுக்கு $200,000 முதல் $400,000 வரையும் கிடைத்தது.
2013ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமது கட்சிக்காரர்கள், நடந்து வந்த இத்தவறுகள் குறித்து அறிந்துகொண்டனர் என்றும் அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கியதும் 14 ஆண்டுகளில் கட்டாத ஈவுத்தொகையை நிறுவனம் மூலம் திரு முஸ்தாக் கட்ட வைத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தம்மைக் கேள்வி கேட்காமல் இருக்க திரு முஸ்தாக் தந்த சலுகை இது என்று திரு சிங் வாதிட்டார். இருப்பினும் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கு தொடுக்கப்பட்டதை அடுத்து இந்த ஈவுத்தொகை மறு மாதம் முதல் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிறுவனத்திலிருந்து பணத்தைக் கையாடும் மோசடி பரிவர்த்தனைகளையும் திரு முஸ்தாக் செய்துள்ளதாக திரு சிங் குற்றம் சாட்டினார்.
திரு முஸ்தஃபாவின் வியாபார பங்காளி சம்சுதின் மொக்தார் அகமதுவின் இரண்டு மகன்களும் இதே போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறும் வழக்கைத் தொடுத்துள்ளனர்.
தெருவோரக் கடையாக இருந்ததை இன்று பெருமளவு வர்த்தகமாக மாற்றியது தன்னுடைய 50 ஆண்டு உழைப்பும் அர்ப்பணிப்புமே என்று தம் தரப்பில் தற்காத்துப் பேசினார் திரு முஸ்தாக்.
வியாபாரத்தின் ஒரே உரிமையாளர் திரு முஸ்தாக் என்று அவரது வழக்கறிஞர் எல்வின் இயோ வாதிட்டார். இதனால் அனைத்து முடிவுகளையும் அவரே எடுத்து வந்தார் என்றும் கூறப்பட்டது.
பல ஆண்டுகளாக திரு முஸ்தாக்கின் கருணையிலும் பெருந்தன்மையிலும் பலனடைந்த கூட்டம், இப்போது ‘சாதமிட்ட கையைக் கடிப்பதாக நடந்துகொள்வது’ வருத்தத்தை அளிப்பதாக திரு இயோ கூறினார்.
திரு முஸ்தஃபாவும் திரு சம்சுதினும் இறந்து பல ஆண்டுகள் ஆகிய பின்னரே அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் அதிக பணம் வேண்டும் எனக் கோரி ‘சுய உரிமை தொடர்பான தவறான புரிந்துணர்வுடன்’ வந்துள்ளதாகவும் அவர் சுட்டினார்.