சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 16) நண்பகல் நிலவரப்படி புதிதாக 9 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,901 ஆகியுள்ளது.
உள்ளூர் சமூகத்தில் புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று இல்லை.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் விடுதிவாசி ஒருவர், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 8 பேர் என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
நேற்று பதிவான 3 கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்று விடுதிவாழ் ஊழியர்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய ஒரு சிங்கப்பூரர், வேலை அனுமதிச் சீட்டுடன் இந்தோனீசியாவிலிருந்து திரும்பிய ஒருவர் என மற்ற இருவரும் இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
லிட்டில் இந்தியாவின் லெம்பு ரோட்டில் இருக்கும் முகம்மதி உணவகத்துக்கு கொவிட்-19 நோயாளி சென்றதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.
முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 38.5 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.09 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.