பாலியல் தொடர்பான தவறான நடத்தைக்காக தெம்புசு கல்லூரியை சேர்ந்த டாக்டர் ஜெரெமி ஃபெர்னாண்டோவை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் பணியிலிருந்து விலக்கியுள்ளது.
“ஒரு ஆசிரியராக அவர் முறையற்று நடந்துகொண்டார்,” என்று குறிப்பிட்டு பெறப்பட்ட 2 புகார்களின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது.
அந்த விசாரணையின் அடிப்படையில் அவர் விலக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
“பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் பல்கலைக்கழகம் எதிர்பார்க்கும் நிபுணத்துவ தரத்துக்கு ஏற்புடையதல்லாத முறையில் டாக்டர் ஃபெர்னாண்டோவின் நடத்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,” என பல்கலைக்கழகத்தின் அறிக்கை தெரிவித்தது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்கலைக்கழகம் உரிய உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புகார் அளித்த இருவரில் ஒருவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இவ்வாண்டு கொவிட்-19ஐ முன்னிட்டு வகுப்புகள் மூடப்பட்டது வரை டாக்டர் ஃபெர்னாண்டோ பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்டது.
மற்றொரு பெண்ணுக்கு, அண்மையில் இணையம் வழி கற்பித்தல் தொடர்ந்தபோது தொல்லை கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒரு நண்பர் மூலம் இந்தச் செய்திகளைத் தெரிந்துகொண்ட இருவரும் போலிசில் புகார் அளிக்காமல் பல்கலைக்கழகத்தின் உதவியை நாடினர்.
இரு வாரங்களுக்கு முன்பே ஃபெர்னாண்டோ பணியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய தகவல்கள் அளிக்கப்படவில்லை எனவும் தெம்புசு கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.