நாட்டின் பல்வேறு பிரிவினருக்கு அடுத்த ஆண்டிலிருந்து கொவிட்-19க்கு எதிரான தடுப்பு மருந்தை வழங்க சிங்கப்பூர் திட்டமிடுகிறது.
சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், முதல்நிலைப் பணியாளர்கள் போன்ற கொரோனா கிருமியால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்கள், கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளாவர்கள் ஆகியோருக்கு தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதாரத் துறையின் மருத்துவச் சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் இன்று (அக்டோபர் 20) நடைபெற்ற மெய்நிகர் மாநாட்டில் தெரிவித்தார்.
பல்வேறு தடுப்பு மருந்துத் தெரிவுகளை ஆராயும் நிபுணர் குழு ஒன்று, தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை குறித்து தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
“நமக்குப் பொருத்தமான தடுப்பு மருந்துகள் எவை என்பது குறித்து ஆராய மருத்துவர்கள், அறிவியலாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது,” என்று பேராசிரியர் மாக் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேர்ந்தெடுத்திருக்கும் பெரும்பாலான தடுப்பு மருந்துகள் இவ்வாண்டு இறுதிக்குள் மூன்றாம் கட்டப் பரிசோதனையை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு தடுப்பு மருந்துகளின் நிலவரம் பற்றி கவனமாக ஆராய்ந்து வரும் சிங்கப்பூர் வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளை வாங்குவதன் மூலம் பக்கவிளைவு அபாயத்தைக் குறைக்க முடியும் என சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் குறிப்பிட்டார்.