சிங்கப்பூரிலிருந்து கடந்த மார்ச் மாதம் 27 அல்லது அதற்குப் பிறகு வெளிநாடுகளுக்குச் சென்ற சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை உடையவர்கள் ஆகியோர், நாடு திரும்பிய பிறகு கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானால், சிகிச்சைக்காக அரசாங்கத்தின் மானியங்கள், காப்புறுதி போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நாட்டின் எல்லைகளைப் படிப்படியாக திறந்துவிடும் நடவடிக்கைகளின் அங்கம் இது என சுகாதார அமைச்சு நேற்று (அக்டோபர் 20) தெரிவித்தது.
மார்ச் 27ஆம் தேதிலிருந்து வெளிநடுகளுக்குச் செல்பவர்கள், நாடு திரும்பிய 14 நாட்களுக்குள் கொவிட்-19 தொற்று ஏற்பட்டால், அரசாங்க மானியங்கள், காப்புறுதியைப் பயன்படுத்த முடியாது, சிகிச்சைக்கான செலவை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்பு அரசாங்கம் அறிவித்திருந்தது.
அனுமதிக்கப்பட்ட பச்சைத் தடங்களில் பயணம் செய்வோருக்கும் முழுநேர படிப்புக்காக வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிக்கிறது.
மார்ச் மாதம் 27ஆம் தேதிக்கு முன்பு நாட்டை விட்டுச் சென்ற சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை உடையவர்களுக்கும் சிங்கப்பூர் தொடர்ந்து கொவிட்-19 சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொள்ளும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
நாட்டின் எல்லைகள் படிப்படியாக திறக்கப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.