சச்சரவுத் தீர்வு மையம் $16 மில்லியன் இழப்பீட்டைப் பெற்றுக்கொடுத்துள்ளது. சம்பள பாக்கி அல்லது நியாமற்ற முறையில் வேலையை விட்டு நீக்கப்பட்ட ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகை இதில் அடங்கும்.
சம்பள பாக்கி அல்லது இழப்பீட்டைப் பெற்றுத் தருமாறு 6,537 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 91 விழுக்காட்டினருக்கு அவர்களுக்குச் சென்றடைய வேண்டிய தொகை முழுமையாகக் கிடைத்துவிட்டது.
இந்தத் தகவலை முத்தரவுப் பங்காளித்துவ அமைப்பு அதன் வருடாந்திர அறிக்கையில் இன்று (அக்டோபர் 21) தெரிவித்தது.
கடந்த நிதி ஆண்டில் சிங்கப்பூர் ஊழியர்களின் கிட்டத்தட்ட $15 மில்லியன் பெறுமானமுள்ள சம்பள பாக்கியை சச்சரவுத் தீர்வு மையம் பெற்றுக்கொடுத்தது. விண்ணப்பம் செய்த ஊழியர்களில் 90 விழுக்காட்டினருக்கு அவர்களது சம்பள பாக்கி முழுமையாகக் கிடைத்தது.
முத்தரப்புப் பங்காளித்துவ அமைப்பை 2016ஆம் ஆண்டில் மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்பளனம் ஆகியவை அமைத்தன. சச்சரவுத் தீர்வு மையம், நியாயமான வேலை நியமன அணுகுமுறைக்கான முத்தரப்புப் பங்காளித்துவம், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றம் ஆகியவற்றை முத்துரப்புப் பங்காளித்துவ அமைப்பு மேற்பார்வையிடுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் வேலை நியமன சட்டம், வேலை நியமன கோரிக்கைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி மாதத்துக்கு $4,500க்கும் அதிகமாக சம்பளம் ஈட்டுவோரும் நியாயமற்ற முறையில் வேலையை விட்டு நீக்கப்பட்டதை எதிர்த்து இழப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இவ்வாண்டு மார்ச் மாதம் வரை நியாயமற்ற முறையில் வேலையைவிட்டு நீக்கியது தொடர்பாக சச்சரவுத் தீர்வு மையத்தின் உதவியை 1,958 ஊழியர்கள் நாடியுள்ளதாக முத்தரப்புப் பங்காளித்துவ அமைப்பு கூறியது.