சிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19

1 mins read
9148e5dd-6349-4ef1-a63d-7f8641e2c759
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் மேலும் எழுவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்று (அக்டோபர் 28) அறிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,987ஆக உள்ளது.

உள்ளூரில் யாருக்கும் புதிதாக கிருமித்தொற்று பதிவாகவில்லை.

இன்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறக்கப்பட்டது.

இதற்கிடையே, கிருமி தொற்றியவர்கள் சென்றிருந்த இடங்களின் பட்டியலில் ராபிள்ஸ் சிட்டி ஷாப்பிங் சென்டர், பூகிஸ் ஜங்ஷன், ஆர்கேட்@தி கேபிட்டோல் கெம்பின்ஸ்கி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிங்கப்பூரில் நேற்று புதிதாக எழுவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்களில் அறுவர் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள்.

அவர்களில் நால்வர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், ஒருவர் சார்ந்திருப்போர் அட்டை வைத்திருப்பவர், ஒருவர் குறுகிய கால அனுமதி அட்டை வைத்திருப்பவர். அவர்கள் இந்தோனீசியா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

உள்ளூர் சமூகத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர் வியட்நாமிலிருந்து வந்த 28 வயது மாது. இங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்ப உறுப்பினரைக் கவனித்துக்கொள்வதற்காக இங்கு வந்தவர் அவர்.

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் இதுவரை 43.4 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.15 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்