சிங்கப்பூரில் மேலும் 9 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்று (அக்டோபர் 30) அறிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,003 ஆக உள்ளது.
இன்று உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கும் விடுதிவாசி ஒருவருக்கும் கிருமித்தொற்று பதிவானது.
இன்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் எழுவர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறக்கப்பட்டது.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 3 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த வாரம் 3 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.
நேற்று பதிவான 7 கிருமித்தொற்று சம்பவங்களும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டவை.
அவர்களில் இருவர் சிங்கப்பூரர், ஒருவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டையில் இருப்பவர், மூவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், ஒருவர் சிறப்பு வருகை அனுமதி அட்டை வைத்திருப்பவர்.
சிங்கப்பூரர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள். மற்றவர்கள் சுவிட்சர்லாந்து, பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் இதுவரை 44.4 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.14 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.