சிங்கப்பூர் ஆய்வாளர்கள் இணைந்து உருவாக்கிய கொவிட்-19 தடுப்பூசியின் இறுதி, மூன்றாம் கட்ட மருத்துவச் சோதனை வரும் டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இப்போது மருத்துவச் சோதனையின் இரண்டாம் கட்டத்தில் இருக்கிறோம். நோயாளிகள் தேர்வு, மருந்தளவு போன்ற நடைமுறைகள் நவம்பருக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அதனால், மூன்றாம் கட்டச் சோதனை டிசம்பர் மாத இறுதிக்குள் தொடங்கும் என நம்புகிறோம்,” என்றார் சிங்ஹெல்த் மருந்தாய்வுப் பிரிவின் துணை மருத்துவ, அறிவியல் இயக்குநரும் இணைப் பேராசிரியருமான ஜென்னி லோ.
புதிதாக உருவாக்கப்படும் மருந்து அல்லது தடுப்பூசி மூன்று கட்டமாக மனிதர்களுக்குத் தரப்பட்டு, அவை பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றனவா, நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கின்றனவா என ஆராயப்படும்.