சிங்கப்பூரில் கடந்த 162 ஆண்டுகளாக வர்த்தகம் செய்து வந்த ராபின்சன்ஸ் சில்லறை விற்பனைக் குழுமம் ஆர்ச்சர்ட் சாலை, ராபிள்ஸ் சிட்டி ஆகிய வட்டாரங்களில் இருக்கும் தனது கடைசி இரண்டு கடைகளையும் மூடுவதாக நேற்று அறிவித்தது.
கடைத்தொகுதிகளின் உரிமையாளர்களிடம் பேசி வருவதாகவும் அடுத்த சில வாங்களுக்கு இயங்க விரும்புவதாகவும் ராபின்சன் நிர்வாகம் தெரிவித்தது.
இதையடுத்து, ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள தி ஹீரன் கடைத்தொகுதியில் உள்ள ராபின்சன்ஸ் கடை இன்று காலை 11 மணி அளவில் திறப்பதற்கு முன்பாகவே ஏறத்தாழ 300 பேர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொவிட்-19 அபாயத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியாவது இருக்க வேண்டுகம் என்று வரிசையில் காத்திருந்தோருக்கு நினைவூட்டப்பட்டது.
தி ஹீரன் கடைத்தொகுதிக்குப் பக்கத்தில் உள்ள ஆப்பிள் ஆர்ச்சர்ட் சாலை கடை வரை வாடிக்கையாளர் வரிசை நீண்டிருந்தது.
ராபின்சன்ஸ் மூடுவதற்கு முன்பு ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காக தமது நண்பர்களுடன் அங்கு வந்ததாக 30 வயது காய் ஃஊ தெரிவித்தார்.
"பேருந்தைவிட்டு இறங்கியதும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர் கூட்டத்தைப் பார்த்து மலைத்துவிட்டோம்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் ராபின்சன்சுக்குக் கிட்டத்தட்ட 175 ஊழியர்கள் உள்ளனர். துபாயில் உள்ள அல் ஃபுத்தாயிம் குழுமத்தின்கீழ் ராபின்சன்ஸ் உட்பட மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், ஸாரா போன்ற பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களுக்கு ஊழியர்களை இடமாற்றம் செய்ய தன்னால் ஆன அனைத்தையும் செய்ய திட்டமிட்டுள்ளதாக ராபின்ஸ்சன்சின் நிர்வாகம் கூறியது.