சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 5) நண்பகல் நிலவரப்படி புதிதாக 7 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,043 ஆகியுள்ளது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். உள்ளூர் சமுக்கத்திலும் ஒருவருக்கு கிருமித்தொற்று பதிவானது.
விடுதிகளில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை.
நேற்று சிங்கப்பூரில் 7 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.
இருவர் விடுதிவாசிகள்; ஐவர் வெளிநாடுகளிலிருந்து இங்கு திரும்பிய பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
அவர்களில் ஒருவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்பவர். 33 வயதான அந்த இந்தியப் பெண் ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார். மற்ற நால்வரும் சிங்கப்பூரில் பணியில் இருப்பவர்கள். அவர்களில் ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருந்தும், இருவர் மியன்மாரிலிருந்தும் ஒருவர் இந்தோனீசியாவிலிருந்தும் வந்தவர்கள்.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 47.4 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

