சிங்கப்பூர்-ஹாங்காங் தற்காலிக விமானப் பயண ஏற்பாடு இந்த மாதம் அல்லது டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏற்பாட்டின்படி பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது. வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் வாய்ப்பும் இராது.
பயணம் செய்ய, பயணிகள் சிங்கப்பூரில் அல்லது ஹாங்காங்கில் 14 நாட்கள் இருந்திருக்கவேண்டும்.
பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ள பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என்று தெரியவந்திருக்கவேண்டும்.
இருந்தாலும் பயணச் சீட்டுக் கட்டணம் கொவிட்-19க்கு முன்பு இருந்ததைவிட 30 முதல் 40 விழுக்காடு வரை கூடி இருக்கிறது.
சேவைகள் அதிகாரிபூர்வமாகத் தொடங்கியதும் மேலும் சேவைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க மாதங்களில் பயணத் தேவை அதிகமாக இருக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்ற ஆண்டு சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் இடையில் இடம்பெற்ற வாராந்திர விமானச் சேவைகளில் எண்ணிக்கை 49 என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலிருந்து மீட்சியடைய பல வழிகளில் அது நடவடிக்கை எடுத்துவருகிறது.
வரும் மாதங்களில் புருணை, ஃபூகூகா, காட்மாண்டு, மாலி ஆகிய நகர்களுக்கு விமானச் சேவைகளை அது தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூருக்கும் நியூயார்க் நகருக்கும் இடையில் புதிய நீண்டதூர பயணச் சேவையும் தொடங்க இருக்கிறது.
இவற்றையும் சேர்த்து 41 இடங்களுக்கு எஸ்ஐஏ சேவை இருக்கும் என்று தெரிகிறது. சென்ற ஆண்டு இந்த நிறுவனம் 92 நகர்களுக்குச் சேவை வழங்கியது.
இந்த ஆண்டு முடிவு வாக்கில் கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையில் 15 விழுக்காட்டு பயணிகளை அந்தச் சேவைகள் ஏற்றிச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.