ஹாங்காங், ஷாங்காய், சென்ஷின் துறைமுகங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஆசியாவின் தலைசிறந்த துறைமுகமாக 32வது முறையாக சிங்கப்பூர்த் துறைமுகம் தேர்வு பெற்றுள்ளது.
ஹாங்காங்கில் திங்கள் அன்று நடந்த 2020ஆம் ஆண்டுக்கான ஆசியப் போக்குவரத்து- தளவாட-விநியோகத் தொடர்ச்சி விருது வழங்கும் விழாவில் இது அறிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.
“சிங்கப்பூர்த் துறைமுகத்தின் செயல்திறன், கடல்துறைப் புத்தாக்கத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஆற்றல் ஆகியவற்றுக்கான அங்கீகாரம் இது,” என்றது ஆணையம்.
இந்த விருதினை ஆசியா கார்கோ நியூஸ் எனும் சஞ்சிகை, தலைமைத்துவம், நீடித்த சேவைத் தரம், புத்தாக்கம், நிர்வாகம் நம்பகத்தன்மையில் பயனீட்டாளர் உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கிவருகிறது.
சஞ்சிகையின் வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
“உலகளாவிய விநியோகத்தை தடையற்றதாக வைத்திருப்பதில், குறிப்பாக உலகப் பொருளியல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில் அனைத்துலகத் துறைமுக மையமாக, சிங்கப்பூர் துறைமுகம் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது,” என்று துறைமுக ஆணையத்தின் தலைமை நிர்வாகி குவா லே கூன் கூறினார்.