மக்களில் பல்வேறு பிரிவினருக்கும் கொவிட்-19 தடுப்பூசி கிடைப்பதற்கு ஏதுவாக, ஒரே ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை மட்டும் சார்ந்திராமல், பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்து இருக்கிறார்.
பட்டியலில் எந்தெந்த தடுப்பூசிகள் இடம்பெறும், எந்தப் பிரிவினருக்குத் தடுப்பூசி வழங்கப்படும் என்பன போன்ற விவரங்கள் அடங்கிய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக திரு கான் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் கான் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
ஒரு தடுப்பூசியைத் தேர்வு செய்யும்போது, வெவ்வேறு பிரிவினரிடத்தில் அதன் செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
"சில பிரிவினரிடத்தில் சில தடுப்பூசிகள் செயல்திறன்மிக்கவையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, சில தடுப்பூசிகள் குழந்தைகளிடத்திலும் சில தடுப்பூசிகள் மூத்த குடிமக்களிடத்திலும் செயல்திறன் குறைந்தவையாக இருக்கலாம்," என்றார் அவர்.
தடுப்பூசி கிடைத்தாலும்கூட, ஒரே நேரத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் அதை வழங்குவது சாத்தியமில்லை என்றும் படிப்படியாக அது வழங்கப்படும் என்றும் அமைச்சர் கான் சொன்னார்.
தடுப்பூசி வழங்குவதில் கொரோனா தொற்றை எதிர்த்து முன்களத்தில் நின்று போராடி வரும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்றும் அவர்களைத் தொடர்ந்து, மூத்த குடிமக்கள் போன்ற எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
ஃபைஸர் நிறுவனம் உருவாக்கிஇருக்கும் தடுப்பூசி 90 விழுக்காட்டிற்கு மேல் செயல்திறன்மிக்கதாக இருப்பதைச் சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகளுக்கான இயக்குநரும் இணைப் பேராசிரியருமான கென்னத் மாக் சுட்டிக்காட்டினார்.
இது வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஃபைஸர் மற்றும் மூன்றாம் கட்டச் சோதனைகளின் இறுதிநிலையில் இருக்கும் மருந்து நிறுவனங்களின் தடுப்பூசிகள் குறித்து அதிக தகவல்கள் தேவைப்படுவதாகப் பேராசிரியர் மாக் குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக, தடுப்பூசிகள் நீடித்த நோயெதிர்ப்புத் திறனை அளிக்காமல் போனால், ஒரு நோயாளிக்கு மீண்டும் தடுப்பூசி போட வேண்டிய நிலை ஏற்படலாம்.
உள்ளூரிலேயே கொரோனா தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பதை ஊக்குவிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் திரு மாக் சொன்னார். அதற்குச் சான்றாக, டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்வி நிலையமும் 'ஆர்க்டியூரஸ் தெரபியூட்டிக்ஸ்' எனும் அமெரிக்க மருந்து நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை அவர் சுட்டினார்.
"இத்தகைய ஆய்வுகளும் பங்காளித்துவங்களும் நம் மக்களிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு தடுப்பூசிகளைப் பெற்றுத் தரும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்றார் பேராசிரியர் மாக்.

