பட்டப்பகலில் அங் மோ கியோ நகைக்கடை ஒன்றில் கும்பலாக நகைகளைக் கொள்ளையடித்ததன் தொடர்பில் அத்திட்டத்தைத் தீட்டிய சூத்திரதாரி எம்.ஜெகதீஷுக்கு மூன்றாண்டு, மூன்று மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி அங் மோ கியோ அவென்யூ 10ல் அமைந்துள்ள புளோக் 574ல் இருந்த ஒரு நகைக்கடையைக் குறிவைத்த கும்பல், கிட்டத்தட்ட $120,000 மதிப்பிலான நகைகளைக் களவாடியது.
கொள்ளைச் சம்பவத்தில் 28 வயது ஜெகதீஷ், வீரமணி சுப்ரன் தாஸ், 37, ஷரவீந்திரன் சுப்பையா, 32 ஆகியோர் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்பட்டது.
மூவரும் சிங்கப்பூரர்கள். திருட்டுப் பொருள்களை நேர்மையற்ற வழியில் பெற்றுக்கொண்டதன் தொடர்பான குற்றச்சாட்டு உட்பட குற்றம் புரிந்துள்ளதை ஷரவீந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு நாளை தண்டனை விதிக்கப்படும். நகைகளைக் கொள்ளையடித்த பிறகு, தப்பிப்பதற்காக வாகனத்தை ஓட்டிய வீரமணிக்கு இம்மாதம் 2ஆம் தேதியன்று மூன்றாண்டுச் சிறையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
கொள்ளையடிப்பதற்கு முன்தினம் மூவரும் கேலாங் பகுதியில் சந்தித்துக்கொண்டதாக அரசுத் தரப்பு தெரிவித்தது. நகைக்கடை பழையது, எச்சரிக்கை ஒலி எழுப்பும் அம்சங்கள் பொருத்தப்பட்டிருக்காது, நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் முதியவர்கள் என்பது போன்ற அம்சங்களைக் கருதிய பின்னர் ஜெகதீஷ் அக்குறிப்பிட்ட நகைக்கடையைக் குறிவைத்ததாக அறியப்படுகிறது.
இக்கொள்ளைச் சம்பவம் பொதுமக்களைக் குறிப்பிடத்தக்க அளவு பீதியடைச் செய்ததாக அரசுத் தரப்பு வலியுறுத்தியது.