கொவிட்-19 தொற்று தலைகாட்டத் தொடங்கிய பிறகு ஆசியாவில் முதன்முதலாக சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையில் தற்காலிக விமானப் பயண ஏற்பாடு நடப்புக்கு வருகிறது.
இதனையடுத்து அந்த இரண்டு நகர்களுக்கும் இடையில் பயணத்திற்கான முன்பதிவுகள் அதிகரித்து இருக்கின்றன. இதன் காரணமாக இத்தகைய பயண ஏற்பாடுகள் மேலும் விரிவடையலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையில் நவம்பர் 22ஆம் தேதி விமானச் சேவை தொடங்குகிறது. 22ஆம் தேதியில் செயல்படும் விமானச் சேவைகளுக்கான சீட்டுகள் 24 மணி நேரத்துக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இன்று மாலை 4.40 மணி நிலவரப்படி, டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்குக்கான ஒருவழி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயணக் கட்டணம் $618 முதல் $1,028 வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலாக பறந்து செல்லவிருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் கேத்தெ பசிபிக் ஏர்வேஸ் நிறுவனங்களின் விமானங்கள் சிலவற்றில் இடங்கள் நிரம்பிவிட்டன. அன்றாடம் 200 பேர் செல்லலாம் என்று வரம்பு விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வரம்பு டிசம்பர் 7ஆம் தேதி 400 பேராக அதிகரிக்கும்.
சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையில் விமானக் கட்டணம் 35% கூடி இருக்கிறது. இரு நகர்களுக்கும் இடையில் தற்காலிக பயண ஏற்பாடு பற்றி சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது. இதில், பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையில்லை என்றாலும் பரிசோதனைகள் அவசியம்.