சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் இம்மாதம் 30ஆம் தேதி முதல் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய இரு முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.
டிசம்பர் 13ஆம் தேதி வரை நீடிக்கக்கூடிய நாடளாவிய இந்த முகக்கவச விநியோகத்தை தெமாசெக் அறநிறுவனம் மேற்கொள்கிறது.
புதிய முகக்கவசங்கள் சுவாசத்துக்கு எளிதான 3டி வகையைச் சேர்ந்தவை என்றும் உள்ளூர் நிறுவனமான 'புரோஷீல்ட்' இதனைத் தயாரித்து உள்ளதாகவும் தெமாசெக் தலைமை நிர்வாகியும் நிர்வாக இயக்குநருமான ஹோ சிங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தின அன்பளிப்புப் பையில் வழங்கப்பட்டதைப்போன்று இந்த 3டி முகக்கவசங்களின் வடிவமைப்பும் முகத்தில் சரியாகப் பொருந்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
காற்றை வடிகட்டும் வசதி இவற்றில் இருக்கும்.