வசிப்பிடத்தில் தங்கியிருக்க வேண்டிய உத்தரவை மீறியதற்காக நான்கு வெளிநாட்டுப் பணியாளர்களின் வேலை அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று (நவம்பர் 20) மனிதவள அமைச்சு தெரிவித்தது.
செல்லத்தக்க காரணங்களின்றி, மனிதவள அமைச்சின் அனுமதியின்றி அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து வெளியே சென்றதாகக் கூறப்பட்டது.
அவர்களில் மூவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர்; ஒருவர் எஸ்-பாஸ் வைத்திருப்பவர்.
அந்த நால்வரில் இருவர் வெளியில் சென்றது, அவர்களுக்கு மனிதவள அமைச்சு வழங்கிய அறிவார்ந்த கடிகாரம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சிங்கப்பூருக்குள் வந்ததும் அறிவார்ந்த கடிகாரத்தை அதிகாரிகள் கட்டி, அது செயல்படுகிறதா என்பதைப் பரிசோதித்து, பின் பூட்டி விடுவர். வசிப்பிடத்திலேயே தங்குவதற்கான உத்தரவைப் பூர்த்தி செய்த பிறகே அதனை நீக்க முடியும். அதனைக் கட்டியிருப்பவர்கள், வசிப்பிடத்திலிருந்து வெளியேறினால் உடனே அது மனிதவள அமைச்சுக்குத் தகவல் அனுப்பிவிடும்.
அந்தக் கடிகாரத்தைச் சேதப்படுத்த அல்லது கையிலிருந்து அகற்ற முயற்சி செய்தாலும் அது எச்சரிக்கைத் தகவலை அதிகாரிகளுக்கு அனுப்பிவிடும். அத்தகையோர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும்.
தனிமைப்படுத்தல் வளாகத்தில் தங்கியிருந்த இருவர் வெளியே சென்றதை பொதுமக்கள், நிறுவன முதலாளி ஆகியோர் மூலம் அமைச்சு அறிந்தது. தனிமைப்படுத்தல் வளாகத்தில் தங்குவோருக்கு அறிவார்ந்த கடிகாரம் கட்டப்படுவதில்லை.
வசிப்பிடத்தில் தங்கியிருக்க வேண்டிய உத்தரவை மீறியதன் தொடர்பில், கடந்த மே மாதம் முதல் இதுவரை 44 பேரின் வேலை அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.