மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) இரவு 11.59 மணியிலிருந்து இது நடப்புக்கு வரும்.
கடந்த 14 நாட்கள் மலேசியாவில் தங்கியிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் வளாகங்களில் தங்கியிருக்க வேண்டும்.
இவ்விரு நாடுகளுக்கிடயே ‘பசுமைத் தட’ ஏற்பாடுகளின் கீழ், பிசிஏ எனப்படும் தங்கியிருந்து வேலை செய்வோர், சிங்கப்பூருக்குத் திரும்பி வரும் பயணிகள் ஆகியோருக்கும் பொருந்தும்.
கடந்த 14 நாட்களில் ஜப்பானில் இருந்து வருவோருக்கும் இதே போன்ற நடைமுறை பொருந்தும்.
வசிப்பிடத்திலேயே தங்கியிருக்கும் உத்தரவை (SHN) தனிமைப்படுத்தல் வளாகங்களில் அல்லாமல், வீடுகளில் நிறைவேற்ற முன்பு அனுமதி பெற்றிருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும்.
சாபா தவிர மலேசியாவின் மற்ற பகுதிகளிலிருந்து வருவோர் தங்களது வசிப்பிடத்திலேயே நிறைவேற்றவும் சாபாவிலிருந்து வருவோர் தனிமைப்படுத்தல் வளாகங்களில் 14 நாட்களுக்கு SHN உத்தரவை நிறைவேற்றவும் முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தது.
மலேசியாவிலும் ஜப்பானிலும் கொவிட்-19 தொற்று பரவல் அதிகரித்திருப்பதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் அல்லாதோர் மலேசியாவில் கடந்த 14 நாட்களுக்குள் தங்கியிருந்திருந்தால், அவர்களும் சிங்கப்பூருக்குள் வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பாலிமெரேஸ் செயின் ரியாக்ஷன் பரிசோதனையைச் செய்திருக்க வேண்டும். இந்த நடைமுறை அடுத்த வெள்ளிக்கிழமை இரவு 11.59 முதல் சிங்கப்பூருக்கு வருவோருக்கு நடப்புக்கு வரும். எனினும், சிங்கப்பூர்- மலேசியா இடையேயான ‘பசுமைத் தட’ ஏற்பாடுகளின்படி சிங்கப்பூருக்குத் திரும்பும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பயணிகளுக்கு இது பொருந்தாது.