மனித இனத்தைப் பொறுத்தவரை உருவம் இல்லை என்றாலும் மனம்தான் ஏறக்குறைய எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் குண நலனிலும் சமூகத்திலும் தொழில்துறையிலும் மொத்த மாக வீட்டு நலனிலும் நாட்டு நலனிலும் மனநலத்தின் முக்கியம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இப்போதைய உலகம் செயல்படும் பாணியில் வீடும் நாடும் மகிழ்ச்சிகரமாகவும் வெற்றிகரமாகவும் திகழ வேண்டுமானால் அதற்கு மக்களின் மனநலன் மூலாதார தூணாகத் திகழ்கிறது.
வேலை பார்த்து பொருள் ஈட்டும் ஊழியர்களின், தொழில்நடத்தும் முதலாளிகளின் மனநலனைப் பொறுத்தே பல தொழில்கள் உயிரோட்டத்துடன் செயல்படுகின்றன, வெற்றிகரமானவையாக முன்னேறுகின்றன. ஊழியர்களின் மனநலனில் அக்கறை காட்டும் நிறுவனங்கள் உற்பத்தித்திறனில் தோற்றதில்லை என்பதே கண்கூடு.
பொதுவாக பொருளியல் துறையில் பார்த்தால் இத்துறையைச் சேர்ந்தவர்களின் மனநலனுக்கு ஊக்கக் குறைவை உண்டுபண்ணக்கூடிய, மனநலனுக்குப் பாதகமாகத் திகழக்கூடிய காரண காரியங்கள் அப்போதைக்கு அப்போது தலைகாட்டுவ துண்டு, பிறகு அவை மறைந்துபோவதுண்டு.
ஆனால் இப்போது உலகம் முழுவதும் நிலவும் மனச்சோர்வு, மனநலன் பாதிப்பு எல்லாம் இதுவரை பூமி காணாத ஒன்றாக நீடிக்கிறது.
கொவிட்-19 கிருமி காரணமாக நிச்சயமில்லாத நிலை நீடிப்பதால் உலகம் முழுவதுமே அரசாங்கம், முதலாளிகள், ஊழியர்கள் ஆகிய முத்தரப்பிடத்திலும் மனரீதியில் ஒரு வகை அச்சமும் ஊக்கக் குறைவும் காணப்படுகின்றன.
அதிலும் வேலை பார்த்து மாதாமாதம் சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஊழியர்களைப் பொறுத்தவரை இந்த மனச்சோர்வு மனநலனைப் பாதிக்கும் அளவுக்குப் போய் இருக்கிறது.
எனவே ஊழியர்களின் மனநலனில் மிகமுக்கிய கவனம் செலுத்தவேண்டிய ஒரு நிலை, தேவை முதலாளிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.
கொவிட்-19 பாதிப்புகளை வெற்றிகரமான முறையில் சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை போட இது அவசர அவசியம் என்றாகிவிட்டது.
கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சியாக ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கிறார்கள். இதனால் குடும்ப சச்சரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வெளியே அலுவலகம் செல்லாமல் வீட்டிலேயே வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு அலுவலக வேலையையும் பார்க்க வேண்டிய நிலை இருக்கின்ற ஊழியர்களிடையே இது பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதோடு, இந்த வேலையும் எத்தனை நாட்களுக்கோ என்று பயந்து பயந்து ஊழியர்கள் வேலை பார்க்கவேண்டிய சூழ்நிலை இருப்பதால் மன அழுத்தம் மன உளைச்சலாகி மன நலனைப் பாழாக்கி, மன நோய்க்குக் கொண்டு செல்கிறது.
இதில் மேலும் ஒன்றையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. கொவிட்-19க்குப் பிறகு அலுவலகத்துக்குத் திரும்பும்போதும் ஊழியர்களுக்கு வேறுமாதிரியான மனநிலை இருக்கும் என்பது நிச்சயம். பல காலம் வீட்டிலேயே வேலை பார்த்துவிட்டு பிறகு அலுவலகச் சூழலுக்கு மாறிக்கொள்வது பிரச்சினை எதுவுமே இல்லாமல் சரளமாக நடக்கும் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க இடமில்லை.
பொருளியல் சூழ்நிலைதான் இப்படி எனில், சமூகச் சூழலையும் கவலைக்கு உரியதாகத்தான் உள்ளது. சிங்கப்பூர் மனநலக் கழகம் 2016க்கும் 2018க்கும் இடையில் ஓர் ஆய்வை நடத்தியது.
ஏழு பேரில் ஒருவர் தன் வாழ்க்கையில் ஏதோஒரு வகை மனப் பிரச்சினையைச் சந்தித்து இருக்கிறார் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இந்த அளவு 2010ல் எட்டு பேரில் ஒருவர் என்று இருந்தது.
அனைத்துலக ஆய்வுகளும் அபாயச்சங்கையே ஊதுகின்றன. வேலையில் மன உளைச்சல் இருந்தால் மன நலன் பாதிக்கப்படும் என்று அவை எச்சரிக்கின்றன. வேலை பார்ப்பது மனதுக்கு நல்லது; ஆனால் வேலைச் சூழல் பாதகமாக இருந்தால் ஊழியரின் உடல் நலனும் மன நலனும் கெடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
உலகில் மனச் சோர்வு காரணமாக 264 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரை கவலையும் சேர்ந்துகொண்டு அலைக்கழிக்கிறது. இவை உடற்குறையை ஏற்படுத்திவிடும் என்று இந்த நிறுவனம் எச்சரிக்கிறது. மனச்சோர்வும் கவலையும் பொருயிலுக்குப் பேராபத்தை விளைவிக்கும்.
இதனால் உற்பத்தித்திறன் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக உலக அளவில் பொருளியலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு US$ 1 டிரில்லியன் அளவுக்கு இருக்குமென சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர், இவை எல்லாவற்றையும் எப்போதுமே கருத்தில்கொண்டு, ஊழியர்களுக்கு வேலை தொடர்பில் ஏற்படக்கூடிய மனநலன் பாதிப்புகளைத் தவிர்த்துவிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கொவிட்-19 பின்னணியில் இது இமாலய முக்கியத்துவம் பெறுகிறது.
ஆகையால் அண்மையில் அரசாங்கம், தொழிற் சங்கம், முதலாளிகளைப் பிரதிநிதிக்கும் முத்தரப்புக் குழு தெரிவித்துள்ள பரிந்துரைகளை நிறுவனங்களும் சரி, ஊழியர்களும் சரி, மிகவும் முக்கியமானவை என்றும் மிகவும் தேவைப்படுபவை என்றும் கருத வேண்டும்.
ஊழியரின் வேலை-வாழ்க்கை இரண்டுக்கும் இடையில் ஒரு நல்ல இணக்கத்தை ஏற்படுத்தும் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முக்கியமான ஒரு பரிந்துரை தெரிவிக்கிறது.
வேலை நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் வேலை தொடர்பான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகளுக்கு- அவை அவசரம் என்று குறிப்பிடப்பட்டாலொழிய - அடுத்த நாள் வேலை நேரத்தின்போதுதான் பதில் வரும் என்று எதிர்பார்க்கக்கூடிய ஓர் ஏற்பாடு இருக்க வேண்டும்.
வீட்டில் இருந்து வேலை செய்தாலும் ஊழியர்களுக்கு வேலை நேரத்திற்குப் பிறகு ஓய்வு வேண்டும்; இல்லை எனில் தங்கள் நிறுவனத்தின் உற்பத்தித்திறனுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதை முதலாளிகள் உணர்ந்தே ஆகவேண்டும். அவ்வப்போது ஊழியர்களின் மன நிலையை நிறுவனங்கள் கண்காணித்து, மதிப்பிட்டு ேதவையான நடவடிக்கைளை எடுத்துவர வேண்டும்.
அதேபோல் ஊழியர்களும் மனப் பிரச்சினை ஏதாவது தலை தூக்கினால், முற்றிவிடும் அளவுக்கு விட்டுவிடாமல் உடனே உதவி நாட வேண்டும். கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து வேகமாக தலை நிமிர வேண்டும் என்ற அவசரத்தில் ஊழியர் மனநலனில் கோட்டைவிட்டுவிட்டால் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடும் என்பதை மறக்கக்கூடாது.

