சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையே மீண்டும் தொடங்க இருந்த பயணத்தை ஒத்திவைக்க இருநாடுகளும் சேர்ந்து முடிவெடுத்திருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
இருதரப்பினரும் முன்வைத்த நிபந்தனைகளுக்கு ஏற்ப மிகவும் தெளிவான முறையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான பயணம் நேற்று முன்தினம் மீண்டும் தொடங்க இருந்தது.
ஆனால் அண்மைக் காலமாக ஹாங்காங்கில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிலைமை மாறியதும் பயணத்தை ஒத்திவைக்க இருதரப்பினரும் மிக விரைவாக முடிவெடுத்ததாக திரு சான் கூறினார்.
ஒப்பந்தப்படி சிங்கப்பூர் அல்லது ஹாங்காங்கில் சமூக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு வாரத்துக்கு சராசரியாக ஐந்தைக் கடந்தால் பயணம் ஒத்திவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 தொடர்பான அன்றாடப் பாதிப்பு பற்றி இருநாடுகளும் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதாக திரு சான் தெரிவித்தார்.
சிங்கப்பூர்-ஹாங்காங் இடையிலான பயணம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று கடந்த சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.