குடும்ப வன்முறை சம்பவங்கள் பற்றி இன்னும் அதிகமான மக்கள் புகார் கொடுத்து வரும் வேளையில், அரசாங்கமும் குடும்ப வன்முறை தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்தும் முயற்சியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
குடும்ப வன்முறை என்றால் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ளவும், தங்களிடம் வருவோர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டுபிடிக்கும் உத்திகளை மருந்தக ஊழியர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பயிற்சிகளும் அளிக்கப்படவிருக்கின்றன.
நோய் முறியடிப்புக் காலத்துக்குப் பிறகு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பெரியவர்கள் மற்றும் சிறார் பாதுகாப்புச் சேவைகள் பிரிவுக்கு குடும்ப வன்முறை தொடர்பிலான விசாரிப்புகள் மாதத்துக்கு சராசரியாக 25% கூடியுள்ளது.
ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலான விசாரிப்புகளைக் காட்டிலும் ஜூன் மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் கிடைக்கப்பெற்ற விசாரிப்புகள் அதிகம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு மற்றும் கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற தேசிய குடும்ப வன்முறை கட்டமைப்பு தொடர்பான மாநாட்டில் பேசிய திருவாட்டி சுன், குடும்ப வன்முறை பற்றி புகார் கொடுப்பதில் பொதுமக்கள் இப்போது அதிக விழிப்புடன் இருக்கிறார்கள் என்றும் இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஒரு மாதத்துக்கு சராசரியாக 118 சம்பவங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
மேலும் தமது அமைச்சு, ‘யூனிட்டி’ மருந்தகங்களுடன் இணைந்து குடும்ப வன்முறை தொடர்பில் அறிகுறிகளைக் கண்டறியும் பயிற்சியையும் வழங்குகிறது என்று கூறிய அமைச்சர், என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அந்த மருந்தகத்தின் 46 ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும் என்றார்.
சிங்கப்பூரில் 60 ‘யூனிட்டி’ மருந்தக கிளைகள் செயல்படுகின்றன. இன்று தொடங்கும் அந்தப் பயிற்சியில் அந்த மருந்தகத்தின் ஊழியர்களுக்கு குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முறை கற்றுக்கொடுக்கப்படும்.
“இதுபோன்ற சமூக கண்டுபிடிப்பு முயற்சிகள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர்களுக்குத் தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க உறுதுணையாக இருக்கும்.
“‘யூனிட்டி’ மருந்தகங்களைத் தவிர, முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், சிங்கப்பூரில் உள்ள பிரஸ்பித்தீரியன் தேவாலாயம் ஆகியவற்றுடனும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இணைந்து குடும்ப வன்முறை தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.
“கொவிட்-19 நமது வேலையைப் பாதித்திருப்பது தொடர்பில் அதிகம் பேசுப்படுவது போல, இந்த கொள்ளைநோய் பரவலுக்குப் பிறகும் நீடிக்கக்கூடிய குடும்ப வன்முறை விவகாரத்திலும் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,” என்றும் திருவாட்டி சுன் வலியுறுத்தினார்.
சமூக அமைப்புகள் மட்டுமல்லாமல் வர்த்தகங்களுடனும் அமைச்சு பணியாற்றி வருகிறது.