ஜோகூர் பாருவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் ஆர்டிஎஸ் இணைப்பு ரயில் திட்டம் 2026ஆம் ஆண்டுக்குள் தயாராகி விடும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் ஜோகூர் மாநில மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தரிடம் உறுதி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இது குறித்து கருத்துரைத்த திரு வீ, இந்தத் திட்டம் அமலாக்கம் பெறும்போது ஜோகூர் மக்களுக்கு பெரும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.
“இந்தத் திட்டத்தை மேற்பார்வையிடும் போக்குவரத்து அமைச்சின் பிரதிநிதி என்ற முறையில், இந்த ரயில் இணைப்புத் திட்டம் முறையாக மேற்கொள்ளப்பட்டு, திட்டமிடப்பட்ட காலத்துக்குள் அதாவது 2026ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெற்றுவிடும் என்று உறுதியளிக்கிறேன்,” என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நான்கு கிலோ மீட்டர் இணைப்பு குறைவான செலவு கொண்ட போக்குவரத்து முறையாக இருக்கும் என்றும் ஜோகூரின் சுற்றுலா, சொத்துத் துறைகளுக்கு சிறந்த பலனளிக்கும் என்றும் கூறினார்.
ஜோகூர் கடற்பாலத்தில் பல்லாண்டுகளாக நிகழ்ந்துவரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இது தீர்வாக அமையும் என்றார் அவர்.