இரு வெளிநாட்டுப் பெண்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு உதவி செய்த குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரி ஒருவர் அவர்களிடமிருந்து பாலியல் சேவைகளையும் கையூட்டையும் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் மீது இன்று (நவம்பர் 24) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
டியோ ஹுவி பெங் என்ற அந்த 47 வயது அதிகாரியுடன் சீன நாட்டவர்களான 37 வயது லியாங் சிங்லான், 32 வயது செங் வென்ஹுவான் ஆகிய இரு பெண்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
டியோ மீது 12 குற்றச்சாட்டுகளும் லியாங், செங் மீது முறையே ஒன்பது, 18 குற்றச்சாட்டுகளும் பாய்ந்தன.
தங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை பெற்றுத் தந்தால் டியோவுக்குப் பாலியல் சேவைகள் வழங்குவதாக லியாங்கும் செங்கும் அவரிடம் கூறினர்.
2018 முதல் கடந்த ஆண்டு வரை லியாங், டியோவுக்கு பாலியல் சேவைகளையும் $2,100 ரொக்கமும், 188.88 யுவான் ($39) அடங்கிய ரொக்க அன்பளிப்பு பொட்டலத்தையும் 7000 யுவான் மதிப்புள்ள கடனையும் வழங்கினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறின.
செங், கடந்த ஆண்டு ஜூலையில் வெவ்வேறு சமயங்களில் டியோவுக்கு பாலியல் சேவைகளும் $1,500 ரொக்கமும் அளித்தார் என்று கூறப்பட்டது.
டியோ, செங், லியாங் ஆகியோர் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதாடப் போவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.