புதிதாக 18 பேருக்கு இன்று (நவம்பர் 14) கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சமூகத்திலோ ஊழியர் தங்கும் விடுதியிலோ 14 நாட்களாக எந்த ஒரு புதிய கிருமித்தொற்று சம்பவமும் பதிவாகவில்லை. சமூகக் கிருமித்தொற்று ஏதும் இல்லாத ஆக நீண்ட இடைவெளி இதுவே.
புதிய சம்பவங்களைச் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை 58,183 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. புதிதாக கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட 18 நோயாளிகளுக்கு சிங்கப்பூர் வந்தவுடன் வீட்டில் இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
புதிய கிருமித்தொற்று நோயாளிகளில் இரண்டு சிங்கப்பூரர்களும் 14 வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரும் அடங்குவர். இதில் 13 பேர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் என்று கூறப்பட்டது.
நேற்று ஐந்து புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதியாகின. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். தொற்றுக்கான அறிகுறி ஏதும் அவர்களிடம் காணப்படவில்லை. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்களுக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களில் ஒருவர், இந்தியாவிலிருந்து திரும்பிய 16 வயது சிங்கப்பூரர். மூவர் இந்தோனீசியாவிலிருந்து திரும்பிய வேலை அனுமதிச் சீட்டு உடையவர்கள். எஞ்சிய ஒருவர் குறுகியகால வருகை அட்டை வைத்திருப்பவர். 58 வயதான அந்த ஆடவர் பிரான்சிலிருந்து வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
திங்கட்கிழமை நிலவரப்படி 58,056 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். 36 பேர் மருத்துவமனையிலும் 30 பேர் சமூக வளாகங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் கடுமையான பாதிப்புடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.