உணவங்காடி கலாசாரத்தைப் பாதுகாக்கும் புதிய திட்டம் குறித்து 19 உறுப்பினர்கள் அடங்கிய உணவங்காடிப் பணிக்குழு ஒன்று முன்மொழிந்துள்ளது. அத்திட்டத்தின்படி மானிய உதவி ஏதும் பெறாத உணவங்காடிக் கடைக்காரர்கள் ஓய்வுபெற விரும்பினால், தங்களின் கடைகளையும் திறன்களையும் உறவினர் அல்லாதவர்களிடம் இனி ஒப்படைக்கலாம்.
புதிதாக உணவுக்கடை தொடங்க விரும்புபவர்களைப் பழைய உணவங்காடிக் கடைக்காரர்களுடன் இணைக்கும் இந்த ‘வாரிசு உரிமை’ திட்டம், முதன்முறையாக அமல்படுத்தப்படுவதாக தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு அறிவித்தது. உணவங்காடித் துறையில் பல காலமாகவே இருந்துவரும் பிரச்சினையைக் கையாள இது உதவும் என்று கூறப்பட்டது.
தேசிய அளவில் உணவங்காடிக் கடைக்காரர்களின் சராசரி வயது 59. வயதான கடைக்காரர்களால் புதியவர்களை ஈர்க்க முடியாத நிலையும் இருந்தது. குறிப்பாக, தங்களுக்குப் பிறகு உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே கடையை ஒப்படைக்க முடியும் என்பது போன்ற கடுமையான விதிமுறைகளும் இருந்து வந்தன.
வாடகை தொடர்பில் மானியச் சலுகை பெற்று வந்த உணவங்காடிக் கடைக்காரர்கள் மட்டுமே தங்களின் கடைகளை உறவினர் அல்லாதவர்களிடம் தர முடிந்தது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் புதிய முன்னோட்டத் திட்டத்தின்கீழ் ஓய்வுபெறும் உணவங்காடி கடைக்காரர்களுடன் புதிய கடைக்காரர்கள் இணைக்கப்படுவர்.
சமையல் குறிப்புகள், சமையல் திறன்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பதுடன் கடைகளைச் சிறப்பாக நிர்வகிக்கவும் புதிய உணவங்காடிக் கடைக்காரர்களுக்குக் கற்றுத் தரப்படும்.
உணவங்காடி நிலையங்களில் தங்களின் வியாபாரத்தைக் குறைந்தது 15 ஆண்டுகள் நடத்திய அனுபவம் உள்ளவர்களுக்கு உதவுவதே தற்போதைக்கு இந்தப் புதிய ‘வாரிசு உரிமை’ திட்டத்தின் நோக்கமாகும்.
தற்போது தங்களின் வாடகைக் கட்டணத்தில் மானியம் பெறாத சுமார் 600 சமைத்த உணவுக்கடைக்காரர்களில் ஒரு சிறு பிரிவினருக்கு இப்புதிய திட்டம் பொருந்தும் என்றது அமைப்பு.
பணிக்குழுவில் பெரும்பாலும் உணவங்காடிக் கடைக்காரர்களே இடம்பெற்றுள்ளனர். இவர்கள் முன்மொழிந்த மற்ற யோசனைகளை மறுஆய்வு செய்து நடைமுறைப்படுத்தும் என்றும் விவரங்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என்றும் அமைப்பு தெரிவித்தது.
‘டிம்பெர் குரூப்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரானவருமான ஹோலண்ட்-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியா, அனுபவமிக்க உணவங்காடி வர்த்தகர்கள் குறித்துப் பேசினார்.
பலர் தங்களின் பெயரையும் சமையல் குறிப்புகளையும் தங்களுக்குப் பிறகு வழங்க ஆளில்லாத நிலை உள்ளதென அவர் குறிப்பிட்டார். நல்ல உணவுவகைகள் இதனால் மறைந்துவிடுவது வீண் என்றும் அவர் கூறினார்.
‘யுனெஸ்கோ’ கலாசார மரபுடைமைப் பட்டியலில் சிங்கப்பூரின் உணவங்காடி கலாசாரத்தைச் சேர்ப்பதற்கான நியமனம் நடைபெற்று வரும் இந்நேரத்தில், பணிக்குழுவின் அறிக்கை சரியான சமயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் உணவங்காடி வர்த்தகம் சந்தித்து வரும் முக்கிய சவால்களைச் சமாளிக்க உதவுவதாகவும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் கருத்துரைத்தார்.
“சமையல் குறிப்புகள், திறன்கள், வழக்கங்கள் போன்றவை கைமாறுவதற்கான வசதியைச் செய்து கொடுப்பதே திட்டத்தின் இலக்கு. இல்லாவிட்டால் அனுபவம் வாய்ந்த ஒருவர், தமக்குப் பிறகு கடையை எடுத்து நடத்த ஆளில்லாமல் துறையை விட்டு வெளியேறும் நிலை வந்துவிடும்,” என்றார் அவர்.