உலகிலேயே ஆகப் பெரிய வர்த்தக உடன்பாடு நவம்பர் 15ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. அந்தச் செய்தியை உலகம் முழுவதும் ஊடகங்கள் பற்பல தலைப்புகளில் பல விதங்களில் வெளியிட்டன.
'சீனா தலைமையில் வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்பட்டு இருக்கிறது. இது அமெரிக்காவுக்கு ஒரு சவால்' என்று தலைப்பிட்டு 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டது.
சீனாவைச் சேர்ந்த 'குளோபல் டைம்ஸ்' என்ற சஞ்சிகை 'அந்த உடன்பாடு மேற்கு பசிபிக்கில் அமெரிக்க ஆதிக்கத்தை முடித்துவிடும்' என்று கருத்து வெளியிட்டது.
'வட்டார பரந்த பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு' என்று குறிப்பிடப்படும் அந்த இணக்கம், உலகிற்கே ஒரு பெரிய முன்னேற்றம் என்று பிரதமர் லீ சியன் லூங் வர்ணித்து இருந்தார்.
இதை சிங்கப்பூர் செய்தித்தாட்கள் வெளியிட்டு இருந்தன.
அந்த உடன்பாடு எட்டு ஆண்டு காலம் நடந்த பேச்சுவார்த்தை முடிவில் கையெழுத்தானது.
சீனா தலைமையில் அல்லது சீனாவின் மும்முர முயற்சிகளால்தான் உடன்பாடு ஏற்பட்டதாக சில செய்திகளும் பகுப்பாய்வுகளும் தெரிவித்தன.
ஆனால் இப்படி சொல்வது முற்றிலும் சரியான ஒன்றாக இருக்காது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேட்டி கண்ட கவனிப்பாளர்களும் அரசதந்திரிகளும் தெரிவித்து இருக்கிறார்கள்.
சீனாதான் அந்த உடன்பாட்டிற்கு முக்கியமான காரணம் என்று ஊடகம் கூறுவது தவறான வழியைக் காட்டுவதாக இருக்கும் என்று பழுத்த அனுபவம் வாய்ந்த அரசதந்திரியான பேர்ரி டெஸ்கர் தெரிவித்தார்.
"ஆசியான் தலைமைத்துவம் அந்த உடன்பாடு வெற்றிகரமாக கையெழுத்திட வழிகோலியது.
"ஆசியான் இல்லை என்றால் இந்த அளவுக்கு பரந்த அளவிலான இணக்கம் ஆசிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்க முடியாது.
"ஆசியான் உச்சநிலை கூட்டத்தில் அந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. அந்த உடன்பாட்டுக்கு ஆசியானே மைய காரணம் என்பதை புலப்படுத்துவதாக இது இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, வட்டார நிலையில் சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகியவை கூட்டாக முடிவு செய்த முதலாவது இத்தகைய உடன்பாடும் இதுவே ஆகும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் எஸ். ராஜரத்னம் அனைத்துலக ஆய்வு பள்ளியில் தனிச்சிறப்பு ஆய்வாளராக உள்ள தூதர் டெஸ்கர் கூறினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் அனைத்துலக சட்டத்தைப் போதிக்கும் இணைப் பேராசிரியர் சைமன் டே, அந்த உடன்பாட்டை மற்ற பங்காளி நாடுகளுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு வழிகாட்டக்கூடிய கட்டமைப்புக் கோட்பாடுகளை வகுத்தது ஆசியான்தான் என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, அந்தப் பேச்சுவார்த்தையில் சிங்கப்பூர் சார்பாக ஈடுபட்ட வர்த்தக தொழில் அமைச்சைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள், கடந்த புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்கள்.
வட்டார பரந்த பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டுப் பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா விலகிக்கொண்டது தங்களுக்கு அதிர்ச்சியாக இருந்ததாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த உடன்பாட்டில் இந்தியா இப்போதைக்குச் சேர்ந்துகொள்ளாது என்று 2019 நவம்பர் 4ஆம் தேதி அறிவித்தார்.
இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்திவிட்டதாக சிங்கப்பூர் பேச்சுவார்த்தை அதிகாரிகளில் ஒருவரான திருவாட்டி சுலைமா முகம்மது, 63, தெரிவித்தார்.
உடன்பாட்டில் இருந்து விலகுவது என்று இந்தியா முடிவுசெய்துவிட்டதால் இதர நாடுகளும் அதே போன்ற முடிவுகளை எடுக்கக்கூடும் என்பதே தங்களுக்கு முக்கிய கவலையாக இருந்தது என்று திருவாட்டி ஜிசெல்லி லீ, 27, என்ற மற்றொரு அதிகாரி கூறினார்.
மற்ற அனைத்து நாடுகளையும் விட்டுவிடாமல் ஐக்கியப்படுத்தி உடன்பாட்டில் கையெழுத்திட செய்வதே அடுத்த சவாலாக இருந்தது என்றார் திருவாட்டி லீ.

