சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் 40 வயதிற்குக் கீழ் உள்ள ஓர் இளம் படைப்பாளிக்கு வழங்கும் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு செல்வி கலைவாணி இளங்கோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
1985ஆம் ஆண்டு பிறந்த செல்வி கலைவாணி கல்வித் துறையில் பணியாற்றுவதோடு சிறுகதை, கட்டுரை, கவிதை, விமர்சனம், நாடகம், மேடைப் பேச்சு எனப் பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு இதழ்களிலும் இணையத்தளங்களிலும் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. பெண்கள், இளையர்கள், இலக்கிய விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு கட்டுரைகளை இவர் படைத்துள்ளார்.
உத்தமம் தமிழ் இணைய மாநாடு மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தைவான், மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளில் கல்வி, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் இவர் படைத்துள்ளார். தாம் எழுதுவதோடு அடுத்த தலைமுறையினருக்கு எழுதும் ஆற்றலை வளர்க்கவும் செல்வி கலைவாணி முனைகிறார். பல்வேறு தளங்களில் மாணவர்களை எழுத ஊக்குவித்து வரும் இவர், தொடக்கப்பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் வரை மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்க உதவி வருகிறார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ப் பிரிவுத் தலைவர் திரு அழகிய பாண்டியன், கண்ணதாசன் விருதை வழங்கியதுடன், இணையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கண்ணதாசனின் கவித்திறன் மற்றும் எளிமையான இலக்கியம் பற்றி உரை நிகழ்த்தினார் .
நிகழ்ச்சியில் தலைமை உரை ஆற்றிய எழுத்தாளர் கழகத் தலைவர் திரு சுப அருணாசலம், இளையருக்கான கண்ணதாசன் விருதிற்கு மிகக் குறைவான எண்ணிக்கையில் பரிந்துரைகள் வருவதாகவும் இனிவரும் ஆண்டுகளில் பொதுமக்கள் தகுதிபெற்ற இளையர்களை அதிக எண்ணிக்கையில் பரிந்துரைக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
மேலும், இப்போது குறிப்பிடப்பட்டுள்ள திறன்களோடு, பத்திரிகை மற்றும் இதழியல் துறையில் சிறந்து விளங்கும் இளையர்களையும் இனிவரும் ஆண்டுகளில் பரிந்துரைக்கலாம் என்பதையும் அவர் அறிவித்தார்.
பாட்டுத்திறன் போட்டியில் 14 வயதிற்கு கீழ் மற்றும் 14 வயதிற்கு மேல் உள்ள இரண்டு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதோடு, முதல் மூன்று நிலைகளில் வந்த வெற்றியாளர்களின் படைப்புகள் காணொளி மூலம் திரையிடப்பட்டன. 14 வயதிற்கு கீழ் உள்ள பிரிவில் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என்ற பாடலைப் பாடி செல்வன் ரோஷன் பரத்வாஜ் முதல் பரிசை வென்றார். 14 வயதிற்கு மேல் உள்ள பிரிவில் ‘உன்னை ஒன்று கேட்பேன்’ என்ற பாடலைப் பாடி 200 வெள்ளி முதல் பரிசை திருமதி ஐயர் லட்சுமி ரவி தட்டிச் சென்றார்.
கவிதாஞ்சலி அங்கத்தில் கவிஞர் தங்க வேல்முருகன், கவியரசர் கண்ணதாசன் பற்றி கவிதை படைத்தார் .
நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய திரைப்பட நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர், கலைமாமணி திரு ஜே.தம்பி இராமையா, “நீ நிரந்தரமானவன், நானோ நிரந்தர மாணவன்” என்ற தலைப்பில் சுவை மிகுந்த சிறப்புரை ஆற்றினார்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் கண்ணதாசன் பாடல்கள் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியும் மனித மனதில் குழப்பங்களும் கவலைகளும் வரும்பொழுது கவிதைகளும் பாடல்களும் எவ்வாறு தன்முனைப்பைத் தருகின்றன என்பது பற்றியும் கண்ணதாசன் பாடல் வரிகளைப் பாடிக்காட்டி பார்வையாளர்களை அவர் பரவசப்படுத்தினார்.