சிங்கப்பூரில் நேற்று ஒரு உள்ளூர் தொற்றுச் சம்பவம் உட்பட ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேக்கா சென்டர் அருகில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அங்கு கடைக்காரர் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தேக்கா சந்தையில் இறைச்சி விற்கும் மாது அவர் என்று அமைச்சு தெரிவித்தது. ஈசூன் ஸ்திரீட் 22ல் தம் கணவருடன் வசிக்கும் அந்த மாது சில ஆண்டுகளாக முஸ்தஃபா சென்டரில் வேலை செய்து வந்தார்.
அவர் பீஷான் ஸ்திரீட் 13, தெம்பனிஸ் ஸ்திரீட் 86 ஆகியவற்றில் வசிக்கும் பிள்ளைகளை அடிக்கடி சென்று பார்த்து வருவார் என்று கூறப்படுகிறது.
அவரது குடும்பத்தார், அவருடன் பணிபுரிந்த ஆடவர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பின்னர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தேக்கா சென்டர், முஸ்தஃபா சென்டர் தவிர, தெம்பனிசில் உள்ள கோர்ட்ஸ் மெகாஸ்டோர், ஈசூனில் உள்ளா நார்த்பாயின்ட் சிட்டி, நியூ வோர்ல்ட் சென்டரில் இருக்கும் ஹோ கீ சூப்பர்ஸ்டோர் ஆகிய இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்றதாக அமைச்சு தெரிவித்தது. கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற இடங்களின் முழுமையான பட்டியல் அமைச்சின் இணையப்பக்கத்தில் உள்ளது.
நேற்று கிருமி தொற்றிய மற்ற ஐவரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்களில் நால்வர் இங்கு பணிபுரிபவர்கள். இருவர் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவர் மலேசியா, இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள். ஐந்தாம் நபர் சார்ந்திருப்போர் அட்டையில் சவூதி அரேபியாவிலிருந்து இங்கு வந்தவர்.
உள்ளுர் விடுதிகளில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இல்லை.