கொவிட்-19 நெருக்கடியால் பல குடும்பங்களுக்குப் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. புதிதாக வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களை வேலைக்கு எடுப்பதில் சிரமம். மேலும் வீடு மாறும் பணிப்பெண்களின் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடு.
ஆனால் பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே இச்சிக்கலை உருவாக்கவில்லை.
நாடாளுமன்ற கேள்வி ஒன்றுக்கு அக்டோபர் 6ஆம் தேதியன்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ பதிலளித்தபோது, கிருமி முறியடிப்புக் காலகட்டத்தில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் வருகை தொடர்பில் கிடைத்த 4,100 விண்ணப்பங்களில் தமது அமைச்சு 630ஐ மட்டுமே அனுமதித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்துப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பில் சென்ற வெள்ளிக்கிழமை மனிதவள அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சிங்கப்பூர் வருவதற்கு முன்பாக கிருமி பரிசோதனை செய்துகொள்வது, வந்ததும் வீட்டில் இருப்பதற்கான உத்தரவை நிறைவேற்றுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதால் “சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாக” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
புதிதாக பணிப்பெண்களை நாடும் முதலாளிகளுக்குத் தடங்கல், அதிகளவு செலவுகள்.
சிங்கப்பூருக்குள் பணிப்பெண் நுழைய அனுமதிக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாடுகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது. சில பணிப்பெண் முகவர்கள் தங்களின் கட்டணங்களை அதிகரித்துவிட்டதாகவும் சில முதலாளிகள் பகிர்ந்துகொண்டனர்.
வீட்டில் இருப்பதற்கான உத்தரவு, கொவிட்-19 பரிசோதனைகள் ஆகியவற்றுக்கான செலவை முதலாளிகளே ஏற்கவேண்டும். இது $1,700 வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
புதிதாக பணிப்பெண்ணைக் கொண்டுவருவதற்குப் புதிய நிர்வாகச் செயல்முறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளது. பணிப்பெண்ணுக்கான வேலை அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிப்பதுடன் மார்ச் மாதம் முதல், முதலாளிகளோ முகவர்களோ மனிதவள அமைச்சிடம் பணிப்பெண் வருகைக்கான அனுமதி கோரியும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கெனவே தங்களிடம் வேலை பார்த்த பணிப்பெண், சிங்கப்பூருக்குத் திரும்பும்போது அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானால், அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மருத்துவச் செலவையும் முதலாளியே ஏற்கவேண்டும். புதிதாக வரும் பணிப்பெண்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும்.
இந்நிலையில், வீடு மாற உள்ள ஒவ்வொரு பணிப்பெண்ணுக்கும் 20 முதலாளிகள் என்ற நிலையில் பணிப்பெண்ணுக்குத் தட்டுப்பாடும் நேர்ந்துள்ளதாக சில பணிப்பெண் முகவர்கள் கூறியுள்ளனர்.
கொள்ளைநோய் வந்து அனைவரையும் ஆட்டி வைப்பதற்கு முன்னதாக, வீடு மாறும் பணிப்பெண்களைப் பெரும்பாலான முதலாளிகள் விரும்பமாட்டார்கள். அவர்களைச் சிக்கல்வாதிகளாகத்தான் பார்ப்பார்கள். ஆனால், தற்போது வேறு வழியில்லாமல் அவர்களும் நாடப்படுகின்றனர்.