மலேசியாவின் 1எம்டிபி பண மோசடியுடன் தம்மைத் தொடர்புபடுத்தும் இணையச் செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த வலைப்பதிவாளர் லியோங் ஸீ ஹியன்னிடம் இருந்து பிரதமர் லீ சியன் லூங் $150,000 இழப்பீடாகக் கோரியுள்ளார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 1எம்டிபி மோசடியில் திரு லீ துணைபுரிந்ததாக ‘தி கவரெஜ்’ இணையத்தளம் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற திரு நஜிப்புக்கு திரு லீ உதவியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் கட்டுரையை வலைப்பதிவாளர் லியோங், 2018ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
அதுகுறித்த அவதூறு வழக்கில் திரு லீயின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங், அனைத்துலக ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள 1எம்டிபி மோசடியுடன் திரு லீயைத் தொடர்புபடுத்துவதைவிட வேறெந்த கடுமையான குற்றச்சாட்டையும் பற்றி யோசிப்பது சிரமம் என்றார்.
இந்த அவதூறு வழக்கில் வலைப்பதிவாளர் லியோங் தரப்பில் வழக்கறிஞர் லிம் தியன் வாதிட்டார். இருதரப்பு வழக்கறிஞர்களும் உயர் நீதிமன்ற நீதிபதி எடிட் அப்துல்லா முன்னிலையில் தங்களது இறுதி விவாதங்களை முன்வைத்தனர்.