கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் சென்ற பாசிர் பாஞ்சாங்கில் உள்ள அகமது பள்ளிவாசல், தெம்பனிஸ் ரோட்டில் உள்ள என் நயீம் (En-Naeem) பள்ளிவாசல், தெலுக் பிளாங்காவில் உள்ள தெமாங்கோங் டாஎங் பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்கள் துப்புரவுப் பணிகளுக்காக இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அதனால் இந்த பள்ளிவாசல்களில் கூட்டுத்தொழுகைகள் ரத்து செய்யப்பட்டன என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்தது.
பள்ளிவாசல்கள் நாளை திறக்கப்படும்.
பள்ளிவாசல்களுக்குச் சென்றிருந்தோரை அடையாளம் காணும் பணியில் சுகாதார அமைச்சு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புகொண்டு ஆவன செய்யப்படும் என்றும் முயிஸ் கூறியது.
பள்ளிவாசல்களுக்குச் செல்லும் போது டிரேஸ்டுகேதர் செயலியைப் பயன்படுத்துவதன் அவசியத்தை முயிஸ் நினைவுபடுத்தியது.