கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டம் (எச்எஸ்ஆர்) தொடர்பாக பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினும் காணொளி மூலம் நேற்று கலந்துரையாடினர்.
அதிவிரைவு ரயில் சேவைத் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
அதே நேரத்தில் இந்தத் திட்டத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரின் நிலைப்பாடு பற்றி அவர்கள் புரிந்துகொண்டனர்.
இந்த இருதரப்பு ரயில் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதற்கான காலக்கெடு (டிசம்பர் 31) நெருங்கும் வேளையில் இரு நாட்டுப் பிரதமர்களும் இதுகுறித்து பேசினர்.
“இந்த அதிவிரைவு ரயில் திட்டம் குறித்த மேல் விவரங்களைக் கூடிய விரைவில் இருதரப்பும் கூட்டறிக்கையில் வெளியிடும்,” என்று இரு தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை இரு பிரதமர்களும் மறுஉறுதிப்படுத்தினர். இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. 350 கிலோ மீட்டர் தூர அதிவிரைவு ரயில் பாதை மூலம் சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்கு 90 நிமிடங்களில் சென்றுவிடலாம்.