வாம்போ டிரைவ் உணவு நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை ரத்தக் காயங்களுடன் கண்டறியப்பட்ட 29 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக போலிஸ் நேற்று தெரிவித்தது.
எண் 90 வாம்போ டிரைவில் நேற்று முன்தினம் அதிகாலை 1.13 மணிக்கு அந்த ஆடவருக்கு வேண்டுமென்றே காயம் விளைவிக்கப்பட்டது குறித்து தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் கூறியது.
“டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அந்த ஆடவர் சுயநினைவுடன் இருந்தார்,” என்று போலிஸ் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வலம் வரும் புகைப்படங்களில், ரத்தக் காயங்களுடன் ஆடவர் ஒருவர் தரையில் கிடப்பது தெரிந்தது. அவரைச் சுற்றியும் அவருக்குப் பக்கத்தில் உள்ள மேசையிலும் நாற்காலிகளிலும் ரத்தக் கறை படிந்திருந்தது. துப்புரவாளர் தரையைச் சுத்தப்படுத்துவதை மற்றொரு புகைப்படம் காட்டியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த உணவு நிலையத்தின் ஒரு பகுதியைச் சுற்றி தடுப்புவேலி அமைக்கப்பட்டது. சம்பவம் குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.