சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 3) புதிதாக ஒன்பது பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் எட்டு பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
புதிதாக கிருமி தொற்றியவர்களில் ஒருவர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியைச் சேர்ந்தவர் என்று சுகாதார அமைச்சு கூறியது. சமூகத்தொற்று யாருக்கும் இல்லை.
புதிதாக கிருமி தொற்றியவர்களையும் சேர்த்து மொத்தம் 58,239 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
புதன்கிழமையன்று வெளிநாடுகளில் இருந்து வந்த இரண்டு பேருக்குத் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. சமூகத்திலோ, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ அன்று யாருக்கும் தொற்று இல்லை.
கிருமித்தொற்று இருந்த இருவரில் ஒருவர் இந்தியாவில் இருந்து வந்த 52 வயது நிரந்தரவாசி. மற்றொருவர் இந்தோனீசியாவில் இருந்து வந்த 32 வயது வேலை அனுமதிச்சீட்டு ஊழியர். இருவருக்கும் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, கொவிட்-19 தொற்று இருப்பவர்கள் சென்று வந்த இடங்களின் பட்டியலில் இரண்டு பள்ளிவாசல்கள் சேர்க்கப்பட்டன.
தெலுக் பிளாங்கா ரோட்டில் இருக்கும் மஸ்ஜித் தெமகாங் தேங் இப்ராஹிம், வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் உள்ள மஸ்ஜித் அகமத் ஆகியவை அந்த இரண்டு பள்ளிவாசல்கள்.