உயர்கல்வி நிலையங்களில் பட்டம் பெற்றவர்கள் வேலை செய்யும்போதும் தொடர்ந்து கற்கவேண்டும் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தி இருக்கிறார்.
இதன்மூலம் படிக்கும் காலத்திலேயே மாணவர்களிடம் அறிவைப் புகுத்துவதில் உயர்கல்வி நிலையங்களுக்கான நெருக்கடி குறையும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இணையக் கருத்தரங்கில் பங்கேற்றபோது அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.
“அவ்வப்போது ஊக்குவிப்பதன்மூலம் ஒருவர் வேலை செய்யும் காலம் முழுவதும் கல்வியையும் கற்றலையும் நீட்டிக்க இயலும்,” என்றார் அவர்.
தாங்கள் பணியாற்றும் நிறுவனங்கள் வழங்கும் பயிற்சித் திட்டங்கள் அல்லது வெளிநிறுவனங்களும் உயர்கல்வி நிலையங்களும் வழங்கும் திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் தனிமனிதர்கள் சிறப்புப் பட்டயம் போன்ற கல்வித் தகுதிகளைப் பெற முடியும்.
தாங்கள் வேலை செய்யும் காலம் முழுவதும் ஆர்வத்துடன் கற்போருக்கு உயர்கல்வி நிலையங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று திரு வோங் வலியுறுத்தினார்.
இதனிடையே, தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழில் கல்லூரிப் பட்டதாரிகள் தங்களது வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கு வதற்குத் தேவையான தேர்ச்சிகளையும் திறன்களையும் பெற்று இருப்பதை உறுதிப்படுத்திட கல்வி அமைச்சு இன்னும் என்ன செய்யலாம் என்பது பற்றி ஆராய, கல்வி இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் தலைமையில் மறுஆய்வு நடவடிக்கை இடம்பெறும். என திரு வோங் அறிவித்துள்ளார்.