சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 4) புதிதாக மூவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் மூவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
உள்ளூரில் கிருமித்தொற்று சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது. விடுதிகளிலும் புதிய சம்பவங்கள் பதிவாகவில்லை.
புதிதாக கிருமி தொற்றியவர்களையும் சேர்த்து மொத்தம் 58,242 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நேற்று இங்கு பதிவான 9 கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்று, தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர் ஒருவருக்குப் பதிவானது. வழக்கமாக ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பரிசோதனைகளில் அவருக்குத் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
நேற்று கிருமித்தொற்று பதிவான மற்ற 8 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
அவர்களில் ஒரு சிங்கப்பூரர், 2 நிரந்தரவாசிகள் அமெரிக்காவிலிருந்து திரும்பியவர்கள்; வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் இருவர் நேப்பாளத்திலிருந்து வந்தவர்கள்; குறுகியகால வருகை அனுமதியுடன் இந்தோனீசியாவிலிருந்து வந்தவர்கள் இருவர்; சார்ந்திருப்போர் அனுமதியில் பிரான்சிலிருந்து இங்கு வந்த 18 வயதுப் பெண்.