கொவிட்-19 தடுப்பூசி மருந்து, எந்த ஓர் ஏழை நாட்டுக்கும் கிடைக்காமல் போகும் நிலைமை வராமல் இருக்க, ஐந்து மில்லியன் அமெரிக்க டாலரை (S$6.6 மி.) அனைத்துலகத் திட்டம் ஒன்றுக்கு சிங்கப்பூர் உறுதியளித்துள்ளது.
இதனால், போதுமான அளவில் கொவிட்-19 தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படுவதும் உறுதிப்படுத்தப்படும்.
'கொவேக்ஸ்' எனப்படும் இந்த அனைத்துலகத் திட்டத்தின்கீழ் நிறுவனங்கள் போதுமான அளவில் தடுப்பூசியைத் தயாரிப்பதும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதும் உறுதிசெய்யப்படும். 2021ஆம் ஆண்டிறுதிக்குள் அனைத்துலக அளவில் இரண்டு பில்லியன் தடுப்பூசி மருந்துகளைச் சேகரித்து, அவற்றைச் சமமாகப் பிரித்து, விநியோகிப்பதே இத்திட்டத்தின் இலக்காகும்.
இதற்காக தடுப்பூசி தயாரிக்கும் பல நிறுவனங்களை ஆராய்ச்சி, உருவாக்கம், உற்பத்தி ஆகிய அம்சங்களில் ஆதரித்து விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இத்திட்டம் வழி 92 குறைந்த வருமான நாடுகளுக்கு கிருமித்தொற்றுக்கான தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்று சுகாதார அமைச்சும் வெளியுறவு அமைச்சும் தெரிவித்துள்ளன.
கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மியன்மார், பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய ஆசியான் நாடுகளும் உலகின் சில சிறிய மாநிலங்களும் இப்பட்டியலில் அடங்கும் என்று அமைச்சுகள் கூறின.
நவம்பர் 25ஆம் தேதி நிலவரப்படி, திட்டத்திற்கான 97 நிதியளிக்கும் பங்கேற்பாளர்களில் சிங்கப்பூரும் ஒன்று.
இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் அனைத்துலக பங்காளிகளில் உலக சுகாதார நிறுவனமும் அடங்கும்.
பொதுச் சுகாதாரம், சமூகம், பொருளியல் ஆகிய கூறுகளில் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இக்கொள்ளை நோய் ஏற்படுத்திவிட்டதாக இரண்டு அமைச்சுகளும் தெரிவித்தன.
"எல்லைகளை கிருமி மதிப்பதில்லை, அனைவரும் பாதுகாப்பு பெறும் வரை யாருமே பாதுகாப்பாக இல்லை.
"பாதுகாப்பான, பயன் அளிக்கக்கூடிய தடுப்பூசி மருந்துகளை வெற்றிகரமாக உருவாக்குவதே, கொள்ளை நோயை முறியடிக்கும் பயணத்தின் முக்கிய படி," என்று அமைச்சுகள் தெரிவித்தன.
இந்த முயற்சி கைகூட, அனைத்துலக பங்காளிகளுடன் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படும் என்று அமைச்சுகள் கூறின.
இதனால் பலதரப்பு முயற்சியில் தடுப்பூசி மருந்து உருவாவதுடன் கொள்ளை நோய்க்கு எதிராக அனைத்துலக செயல்பாடு ஒன்றும் ஏற்படுத்தப்படுவதாக அவை குறிப்பிட்டன.

