இந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வாரமும் சிங்கப்பூரின் ஐந்து பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஒரே நேரத்தில் 250 பேர் வரை அனுமதிக்கப்படுவர்.
அல் இஸ்லா, அல் இஸ்திக்ஃபார், தாருல் குஃப்ரான், அஸ்யஃபா, அல் கைர் ஆகியன அந்த ஐந்து பள்ளிவாசல்கள். தொழுகைக்கு வருபவர்கள் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படுவர். ஒவ்வொரு குழுவிலும் 50 பேர் வரை இடம்பெறலாம்.
இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக 19,365 இடங்கள் வழங்கப்படுவதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) நேற்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
வழிபாட்டுத் தலங்களில் 250 பேர் வரை அனுமதிக்கும் முன்னோட்டத் திட்டத்தைக் கடந்த மாதம் அரசாங்கம் தொடங்கியிருந்தது. அன் நூர், யூசோஃப் இஷாக், அங்கூலியா, சுல்தான், மாரோஃப் ஆகிய மற்ற ஐந்து பள்ளிவாசல்கள் இந்த முன்னோட்டத் திட்டத்தில் பங்கேற்று இருந்தன.
இப்போது ஒவ்வொரு தொழுகை அமர்வுக்கும் 150 பேர் வரை இந்தப் பள்ளிவாசல்களில் அனுமதிக்கப்படுவர்.
முயிஸ் மன்றத்தின் இந்த அறிவிப்பைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி வரவேற்றார். ஆனால், கொவிட்-19க்கு எதிரான போர் இன்னமும் முடிவடையவில்லை என்பதை முஸ்லிம் சமூகத்திற்கு அவர் நினைவூட்டினார்.
"பள்ளிவாசல்களுக்குச் செல்லும்போது டிரேஸ்டுகெதர் கருவி அல்லது செயலியைப் பயன்படுத்துமாறு சமூகத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று நேற்று முன்தினம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டார்.


