சிங்கப்பூரில் பொதுவாக வெப்பம் அதிகமாக உள்ளது. அதை ஒன்றும் செய்ய முடியாது என்று விட்டு விட முடியாது என்று உள்ளூர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் காரணமாக அந்த வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்க ஓர் ஆய்வுத் திட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
வெப்பத்தின் தாக்கம் வெளிநாட்டு ஊழியர்கள், ராணுவ வீரர்கள், உணவங்காடிக் கடைக்காரர்கள் போன்ற உடல் அளவில் கடுமையாக வேலை செய்வோரின் சுகாதாரம், வேலை உற்பத்தித் திறன் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது ஆய்வில் கண்டறியப்படும்.
புரோஜெக்ட் ஹீட்-சேஃப் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆய்வு மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதில் மேற்கூறப்பட்ட பிரிவினருக்கு வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வழிகள் ஆராயப்படும். அதில் கொள்கை மாற்றங்களும் இடம்பெறக்கூடும்.
இவ்வாண்டு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர்-இடிஎச் நிலையம் ஆகியவற்றின் உள்ளூர் ஆய்வாளர்களும் வியட்னாம், கம்போடியா, சீனா ஆகிய வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஈடுபடுவார்கள். இந்த ஆய்வுக்கு பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஆய்வு அறநிறுவனம் ஆதரவளிக்கிறது.

