‘ராயல் கரீபியன்’ஸ் குவான்டம் ஆஃப் தி சீஸ்’ சொகுசுக் கப்பலில் இருந்தபோது அதன் 83 வயது பயணிக்கு கொவிட்-19 இருப்பது பரிசோதனையில் தெரியவந்த நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட இறுதிப் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவருக்கு தொற்று இருப்பதாக முன்பு கூறப்பட்டபோது அவருடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள பிறப்பிக்கப்பட்டிருந்த ஆணை மீட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கப்பலில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை நடைமுறைகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
83 வயது ஆண் பயணி, கப்பலில் இருந்தபோது நேற்று காலை அவருக்குச் செய்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பதாகக் கூறப்பட்டதுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
வயிற்றுக்கோளாறு பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறியதையடுத்து அவருக்கு ‘பிசிஆர்’ பரிசோதனை கப்பலிலேயே அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரிடமிருந்து பெறப்பட்ட சளி மாதிரியைக் கொண்டு தேசிய பொதுச் சுகாதார பரிசோதனைக்கூடத்தில் மேற்கொண்ட பரிசோதனையிலும் நேற்றிரவு அவரிடமிருந்து பெறப்பட்ட பரிசோதனை மாதிரியைக் கொண்டு செய்யப்பட்ட பரிசோதனையிலும் அவருக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.