பாதசாரியின் மீது மோதி அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த பின்லாந்தைச் சேர்ந்த 42 வயது சைக்கிளோட்டி, டோனி டிமோ சல்மினனுக்கு ஒரு வார சிறை இன்று விதிக்கப்பட்டது.
கடந்தாண்டு அக்டோபர் 1ஆம் தேதி சிம்ஸ் அவென்யுவில் நடந்த இந்த விபத்தில் மண்டையில் கடுமையாகக் காயமடைந்த 53 வயது திரு சியூ ஃபுக் இயூ, ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
மாலை 6.16 மணிக்கு சிமஸ் அவென்யு ஈஸ்டை நோக்கிச் செல்லும் நான்கு தட சாலையான சிம்ஸ் அவென்யூ ரோட்டின் இடக்கோடி தடத்திலிருந்து திரு சியூ சென்றுகொண்டிருந்தார். திரு சியூ மூன்றாவது தடத்தில் இருந்ததை சல்மினன் கண்டபோதும் தனது சைக்கிளின் வேகத்தைக் குறைக்கவில்லை. காயமடைந்த திரு சியூ டான் டொக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சல்மியன் அதே நாளன்று தாமாகவே போலிசாரிடம் சென்று நடந்தவற்றை விளக்கினார்.
சைக்கிளை நிறுத்த முயன்றபோதும் இந்த மோதலைத் தவிர்க்க முடியவில்லை என்று சல்மியனின் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனை ஏற்க மறுத்த அரசு தரப்பு வழக்கறிஞர், திரு சியூ விதிகளை மீறி சாலையைக் கடக்கவில்லை எனக் கூறினார். சைக்கிளை கவனக்குறைவாக ஓட்டி திரு சியூவின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததற்காக சல்மியனுக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.