மார்பகப் புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சைத் தெரிவுகளை வழங்கும் ஒரு பரிசோதனை தவறான முடிவுகளைத் தெரியப்படுத்தியதால், கிட்டத்தட்ட 90 நோயாளிகளுக்கு 2012ஆம் ஆண்டு முதல் தேவையில்லாத சிகிச்சை அளிக்கப்பட வழி வகுத்துள்ளது.
தவறான சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு இதயப் பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு, நடுக்கம், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும்.
இது குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட கூ டெக் புவாட் மருத்துவமனை, சுமார் 180 நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை முடிவுகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தது.
அவர்களுக்குத் தவறுதலாக வழங்கப்பட்ட மனித மேல்தோல் வளர்ச்சிக் காரணி ஏற்பி 2 (HER2) பரிசோதனை தவறான முடிவுகளுக்குக் காரணம் என்று ஆரம்பக்கட்ட புலனாய்வுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்து அதற்கேற்றாற் போல் சரியாக சிகிச்சை அளிக்க 'ஹெர்2' பரிசோதனை உதவும்.
இந்த விவகாரம் வெளிக்கிளம்பிய பிறகு, 2012ஆம் ஆண்டிலிருந்து பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனை அடையாளம் கண்டு, முன்பு அவர்களுக்கு செய்த பரிசோதனை மாதிரிகளை வெளிப்புற ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி விரைவாக மறுசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
மறுசோதனை முடிவுகளில் சில வந்துவிட்டதால், சம்பந்தப்பட்ட நோயாளிகளைத் தொடர்புகொள்ளும் பணியை மருத்துவமனை தொடங்கி, அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் ஆதரவளிக்கிறது.
நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனை தனது ஆய்வுக்கூடத்தில் 'ஹெர்2' பரிசோதனையை நடத்துவதை நிறுத்திக் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவம் குறித்து தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்துக்கு கடந்த மாதம் 22ஆம் தேதியும் சுகாதார அமைச்சுக்கு கடந்த மாதம் 24ஆம் தேதியும் தெரியப்படுத்தி விட்டதாக கூ டெக் புவாட் மருத்துவமனை கூறியது.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் ஒரு சுயேச்சை ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது.
"பாதிக்கப்பட்ட எல்லா நோயாளிகள், அவர்களின் குடும்பங்கள், அவர்களுக்குச் சிகிச்சை அளித்த புற்றுநோய் மருத்துவர்கள் ஆகியோருக்கு எங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்குத் தேவைப்படும் எல்லா உதவிகளையும் ஆதரவையும் வழங்கி, அவர்களை சிறந்த முறையில் கவனித்துக்கொள் வோம்," என்றார் கூ டெக் புவாட் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி திருமதி சியூ குவீ தியாங்.
இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த சுகாதார அமைச்சு, "இச்சம்பவத்தை நாங்கள் கடுமையாகப் பார்க்கிறோம். மருத்துவ அமைப்பு களின் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை முறைகளின் நம்பகத்தன்மை அடிக்கடி சரிபார்க்கப்பட வேண்டும். பரிசோதனை நடைமுறைகளில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவ அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறியது.


