சிங்கப்பூர் குடிமக்கள் அரசாங்க மின்னிலக்க சேவைகளைப் பயன்படுத்தும்போது தங்களது சிங்பாஸ் கணக்கு அடையாளத்தை உறுதி செய்ய இரு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கணினி, கேமரா வசதியுள்ள கைபேசிகள் மூலம் தங்களது முக அடையாளத்தைப் பதிவு செய்வது அல்லது ஒருமுறை அனுப்பப்படும் மறைச் சொல்லை (ஓடிபி) நம்பகமான மற்றொரு சிங்பாஸ் பயனாளரின் திறன்பேசிக்கு அனுப்பிப் பெறுவது ஆகிய இந்த இரு புதிய செயல்முறைகளும் நேற்று முதல் நடப்புக்கு வந்தன.
ஏற்கெனவே உள்ள சிங்பாஸ் கைபேசிச் செயலி, குறுஞ்செய்தி மூலம் பெறும் மறைச் சொல்ல (ஓடிபி) போன்றவற்றுடன் கூடுதலாக இவ்வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்க தொழில்நுட்ப முகவை (GovTech) நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
புதிய முக அடையாள முறையைப் பயன்படுத்த, சிங்பாஸ் பயனாளர்கள் தங்களது கணக்கைத் திறக்கும்போது பதிவுப் பெயரையும் மறைச் சொல்லையும் பயன்படுத்த வேண்டும்.
பின்னர், அவர்கள் தங்களது முக அடையாளத்தை இணைய வசதியுள்ள கணினி கேமரா அல்லது திறன்பேசியின் கேமரா மூலம் உறுதி செய்யலாம்.
இந்த முறையில் முக அடையாளம், தேசிய ‘பயோமெட்ரிக்’ தரவுத்தளத்தில் பதிவாகியுள்ள முக அடையாளத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும்.
தரவுத்தளத்தை உள்ளடக்கிய இந்த உடனடி சரிபார்ப்பு செயல்முறை சிங்பாஸ் கைபேசி செயலி பயன்பாட்டில் இல்லை.
அரசாங்க தொழில்நுட்ப முகவையின் தேசிய மின்னிலக்க அடையாளப் பிரிவின் மூத்த இயக்குநர் திரு குவோக் கியூக் சின், சில பயனாளர்களால் திறன்பேசிகள் அல்லது கணினிகளைப் பயன் படுத்த முடியாது என்பதை முகவை அறிந்துள்ளதாகக் கூறினார்.
முக அடையாளத்தைப் பயன்படுத்துவது, அடையாளத்தை உறுதி செய்யும் ஈரடுக்கு முறைக்கு (2எஃப்ஏ) மாற்றாக இருக்கும். இது கூடுதலாக ஒருமுறை அனுப்பப்படும் ‘ஓடிபி’யைப் பயன்படுத்துவது போன்ற கூடுதல் தகவல்களின் தேவையை குறைக்கிறது.
மேலும் இந்த முக அடையாளமுறை, குறுஞ்செய்தி, ஓடிபி போன்றவற்றைப் பெற உள்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட எண் இல்லாத வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கும் உதவுகிறது,” என்றுதிரு குவோக் தெரிவித்தார்.
புதிய அடையாள சரிபார்ப்பு முறைகளைப் பயன்படுத்த தகுந்த கருவிகள் இல்லாதவர்கள், ‘அவர் தெம்பனிஸ்’ மையத்திலுள்ள பொது சேவை மையம் அல்லது மசே நிதி கழகத்தின் பீஷான் சேவை மையம் போன்ற குறிப்பிட்ட இடங்களில் இச்சேவையைப் பெறலாம்.
மோசடியைத் தடுக்க, புகைப் படம், காணொளிப் படம், முகக்கவசம் அணிந்திருந்தல் போன்றவற்றைக் கண்டுபிடித்து, தடுக்கும் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.
மற்றொரு புதிய வசதியில், பயனாளர்கள் அடையாள உறுதியின் ஒரு பகுதியாக, ஒருவரின் சார்பில் மற்றவர் குறுஞ்செய்தி மூலம் ஒருமுறை பயன்படுத்தும் ‘ஓடிபி’யைப் பெற அனுமதிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, வயதான பெற்றோர் தங்களது கணக்குகளை பிள்ளைகளின் திறன்பேசி எண்ணுடன் இணைக்கலாம்.
இதன் வழி, பெற்றோர் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்துபோதும் ஒருமுறை பயன்படுத்தும் ‘ஓடிபி’யைப் பிள்ளைகள் தங்களது கைபேசியில் பெறுவார்கள்.
இந்த வசதியைப் பெறப் பெற்றோரும் பிள்ளைகளும் நேரில் சிங்பாஸ் சேவை முகப்புக்குத் தங்கள் அடையாள அட்டையோடு சென்று பதிந்துகொள்ளவேண்டும்.