ஜாலான் டான் டோக் செங்கிலுள்ள கட்டுமானத் தளத்தில் 2019 நவம்பர் 4ஆம் தேதி பாரந்தூக்கி விழுந்ததில் மரணம் அடைந்தார் தமிழகத்தைச் சேர்ந்த 28 வயது கட்டுமானத் துறை ஊழியர் திரு முத்தையா வேல்முருகன்.
அவரது மரணம் துரதிர்ஷ்டவசமானது என்று மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இவரது மரணத்தில் சந்தேகப்படும்படியான அடிப்படை ஆதாரங்கள் எவையும் இல்லையென மரண விசாரணை அதிகாரி கூறினார்.
பாரந்தூக்கி 300 கிலோ கிராம் எடையுள்ள சாரக்கட்டை ஏற்றி அதனை நகர்த்திக்கொண்டிருந்தபோது திடீரென்று அது முறிந்து விழுந்ததில், கீழே நின்றுகொண்டிருந்த வேல்முருகனும் மற்றொரு பங்ளாதேஷ் ஊழியரும் படுகாயமடைந்தனர்.
அந்தச் சம்பவத்தில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாரந்தூக்கியின் இரும்புக் கம்பி சிக்கி உடைந்த நிலையில், அதனுடன் கோக்கப்பட்ட சுமையும், அந்தச் சுமை பொருத்தப்பட்டிருந்த கொக்கியும் கழன்று கீழே விழுந்தன.
அப்போது அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த திரு வேல்முருகன் மற்றும் அவரது நண்பரும் அடிபட்டனர் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.