கொவிட்-19 கிருமி கருவுற்ற தாயிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்குத் தொற்றுவதற்கான ஆதாரங்கள் இல்லை. மேலும் கருவுற்றிருப்பதால் பெண்கள் கொரோனா கிருமியால் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை என்பதை சிங்கப்பூரில் அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்ப்பிணிகளிடம் கொவிட்-19ன் தாக்கம் குறித்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்று ஏற்பட்ட 16 கர்ப்பிணிப் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்ட சிங்கப்பூர் மகப்பேறியல் ஆய்வுக் கட்டமைப்பு (சோர்ன்) நடத்திய இந்த ஆய்வின் முடிவு, ‘அனால்ஸ் அகாடமி ஆஃப் மெடிசின்’ சிங்கப்பூர் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.
மாதிரி அளவு சிறியதாக இருந்தாலும், நோய்த்தொற்று விகிதங்கள் மிக அதிகமாகவும், மாதிரி அளவுகள் பெரிதாகவும் உள்ள நாடுகளில் நடத்தப்பட்ட இதே போன்ற ஆய்வுகளை இந்த முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
பிரிட்டனில், ராயல் கல்லூரியின் மகப்பேறியல் மகப்பேறு மருத்துவர்கள் கடந்த மே மாதத்தில் நடத்திய ஆய்வில் 427 கர்ப்பிணிகள் பங்கேற்றனர். அதில் பெரும்பாலானவர்கள், கொவிட்-19ஆல் அதிகம் பாதிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
சிங்கப்பூரில் ஆய்வில் பங்கேற்ற 16 கர்ப்பிணிகளும் முழுமையாகக் குணமடைந்தனர். இரண்டு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இழந்தனர், ஆனால் ஒரு கருச்சிதைவு மட்டுமே கொரோனாவினால் ஏற்பட்ட சிக்கல்களுடன் தொடர்புடையதாக இருந்தது.
மகப்பேறு சேவைகளை வழங்கும் கே.கே பெண்கள் குழந்தைகள் மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகிய சிங்கப்பூரின் மூன்று பொது மருத்துவமனைகளால் இந்த புதிய ஆய்வுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மகப்பேறு சுகாதாரத்தின் தொடர்பில் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதை சோர்ன் நோக்கமாகக் கொண்டுள்ளது. மருத்துவமனைகளுக்கிடையே உள்ள கூட்டு செயல்பாடுகளின் விரிவாக்கம் இது என்று ‘சோர்ன்’ அமைக்கப்பட்டது தொடர்பான இன்றைய அறிக்கை தெரிவித்தது.
‘சோர்ன்’ அமைப்பின் கீழ், மருத்துவமனைகள் பொதுவான ஆனால், கடுமையான மகப்பேறியல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஆய்வை மருத்துவமனைகள் மேற்கொள்கின்றன. புற்றுநோய்க்கு இட்டுச் செல்லக்கூடிய ‘ஏடிபிகல் எண்டோமெட்ரியல் ஹைபர்பிளாசியா’, கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம் போன்றவை அந்தச் சிக்கலான பிரச்சினைகளில் அடக்கம்.