சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் உள்ள வேலியிடப்பட்ட காண்டாமிருக வசிப்பிடப் பகுதிக்குள் இளையர் ஒருவர் நேற்று (டிசம்பர் 17) அனுமதி இன்றி சென்றது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிவரும் அந்தக் காணொளியில், காண்டாமிருக வசிப்பிடத்துக்குள் செல்லும் ஆடவர் கரணம் அடித்து, பின் அந்த வசிப்பிடத்தின் மறைப்பைத் தாண்டி அங்கிருந்து வெளியேறுவது பதிவாகியுள்ளது.
அந்த இளையரின் டிக்டோக் கணக்கில் பதிவேற்றப்பட்ட அந்தக் காணொளி 33,000க்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்பில் போலிசில் புகார் அளித்திருப்பதாக சிங்கப்பூர் வனவிலங்கு காப்பு அமைப்பான Wildlife Reserves Singapore தெரிவித்துள்ளது.
அந்த இளையரின் செயலைக் கண்டித்த அவ்வமைப்பு, “கண்மூடித்தனமான, சமூகப் பொறுப்பில்லாத, மிகவும் ஆபத்தான இந்தச் செயல் வனவிலங்குகளை அவமதிப்பதாக உள்ளது,” என்று தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது உயிருக்கே உலைவைக்கும் செயல் என்றும் இவ்வாறு செய்யக்கூடாது என்றும் விலங்கியல் தோட்டம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.
கடந்த 2008ஆம் ஆண்டில், வெள்ளைப் புலிகளின் வசிப்பிடத்திற்குள் நுழைந்த 32 வயதான, விலங்கியல் தோட்ட ஊழியரை பார்வையாளர்கள் சூழ்ந்திருக்கும்போதே 3 புலிகள் அடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.